மும்பை: பாகிஸ்தான் உடன் ஏற்கனவே நிலவி வரும் அரசியல் விவகாரங்கள் காரணமாக இந்தியா அந்த நாட்டுக்கு எதிராக இரு தரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது கிடையாது. மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் எந்த தொடரிலும் இந்தியா பங்கேற்பது இல்லை.
இந்த சூழலில் தற்போது காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டுக்கும் இடையிலான உறவு மேலும் சேதம் அடைந்திருக்கிறது. இதனால் இனி ஐசிசி தொடரில் கூட பாகிஸ்தானுக்கு எதிராக தாங்கள் விளையாட மாட்டோம் என்று இந்தியா உறுதியாக இருக்கின்றது.

இதன் காரணமாக தற்போது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்தியா பங்கேற்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பாகிஸ்தானை போல வங்கதேசத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், வங்கதேசத்தில் உள்ள தற்காலிக அரசு இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை கண்டித்து வங்கதேசத்துக்கு எதிராகவும் இனி இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காது என்ற ஒரு முடிவை பிசிசிஐ எடுத்திருப்பதாக தகவல் வெளியாகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களது கிரிக்கெட் அணியை வங்கதேசத்திற்கு அனுப்ப போவதில்லை என்ற முடிவில் மத்திய அரசு இருக்கிறது.
இதன் காரணமாக பாகிஸ்தானை போல இனி வங்கதேசத்துக்கு எதிராகவும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. ஏற்கனவே 10 நாடுகளுக்குள்ளே தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது இதில் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடாத நிலையில் தற்போது அந்த பட்டியலில் வங்கதேசமும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.