மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு பின்பு இந்திய ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணயின் கேப்டன் யார்? என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. அந்த பதவியை பிடிக்க "குட்டி கோலி" கே எல் ராகுல் பல ஆண்டுகளாக காய் நகர்த்தி வருகிறார். விராட் கோலிக்கு பின்னர் கே எல் ராகுல் தான் இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என்ற பேச்சு அப்போது இருந்தது.
ஆனால், ரோஹித் சர்மா கேப்டன் ஆனது மட்டுமின்றி, தற்போது டி20 உலகக் கோப்பையையும் வென்று கொடுத்து இருக்கிறார். அவர் அடுத்த ஆண்டு ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அதே சமயம் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி ஏற்று இருக்கிறார். இந்த நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நிச்சயமாக கே எல் ராகுலுக்கு இனி கேப்டன் பதவி கிடைக்காது என கூறப்படுகிறது.

ஏனெனில், அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதே சமயம் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று வருகிறார். கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சரியாக ஆடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார். தற்போது கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால், ஸ்ரேயாஸ் இந்திய அணியின் கேப்டனாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது, அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இருவரும் இணைந்து அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தனர். பயிற்சியாளராக கவுதம் கம்பீரும், கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடியாக ஐபிஎல் கோப்பையை வென்று இருப்பதால், அதே ஜோடி இந்திய அணியிலும் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கவுதம் கம்பீர் தனக்கு ஏற்றவர்களுடன் பணி செய்யவே விரும்புவார் என்ற வகையில் அவர் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக்க முயற்சிக்கலாம். அதே சமயம், ஸ்ரேயாஸ் மீது பிசிசிஐ நிர்வாகம் அதிருப்தியில் இருக்கிறது. முதலில் பிசிசிஐ-ஐ சமாதானம் செய்தால் தான் கவுதம் கம்பீர், ஸ்ரேயாஸ்-ஐ கேப்டனாக்க முடியும்.
இதற்கு முந்தைய தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தாங்கள் ஸ்ரேயாஸ் ஐயரைத் தான் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக நினைத்ததாகவும், அதற்காக அவருக்கு வாய்ப்பு அளித்து அவரை வளர்த்து வந்ததாகவும் கூறி இருந்தார். இடையே ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதாலும், ஃபார்ம் இழந்ததாலும் அவர் அந்த வாய்ப்பை இழந்ததாக கூறியிருந்தார். தற்போது கம்பீர் வரவால் மீண்டும் ஸ்ரேயாஸ் கேப்டன் ஆகும் வாய்ப்பு கைகூடி வந்துள்ளது. அவர் தனது ஃபார்மை மட்டும் சரியாக பார்த்துக் கொண்டாலே அது நடந்து விடும்.