மெல்போர்ன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணிக்கு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது. 33 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு ஒவ்வொரு வீரருக்கும் பேண்ட், சட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
உலக கோப்பையின்போது இந்திய கிரிக்கெட் அணி தனது சீருடையை மாற்ற திட்டமிட்டது. புதிய வகை, சீருடையை நைக் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த சீருடையை, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போதே உடுத்த உள்ளனர் இந்திய வீரர்கள்.
ஒவ்வொரு வீரருக்கான ஷர்ட் மற்றும் பேண்ட் சராசரியாக 33 பிளாஸ்டிக் பாட்டில்களை ரீ-சைக்கிள் செய்ததன் மூலம் கிடைத்த மெட்டீரியலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை மிகவும் சவுகரியமாக இருப்பதாக கேப்டன் டோணியும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். "ஆடையில் ஏற்படும் ஒரு சிறிய இடையூறும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடும். ஆனால் புதிய ஆடை மிகவும் வசதியாக உள்ளது" என்று டோணி கூறியுள்ளார்.
அணி வீரர் அஸ்வின் கூறுகையில், "எங்களால் முடிந்த அளவுக்கு சுற்றுச்சூழலுக்கு உதவிகரமாக உள்ளோம் என்று நினைப்பது பெருமையாக உள்ளது. ரீ-சைக்கிள் ஆடை சிறப்பாக உள்ளது" என்று கூறியுள்ளார். புதிய சீருடையும் வழக்கம்போலவே, நீல நிறத்திலானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.