கொல்கத்தா: இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய விரித்திமான் சாஹா ஓய்வை அறிவித்து இருக்கிறார். அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது. அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார். 2024 - 25 ரஞ்சி ட்ராபி தொடரில் பெங்கால் அணிக்காக ஆடி வருகிறார் விரித்திமான் சாஹா. இதுவே தனது கடைசி தொடர் என அவர் அறிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. விரித்திமான் சாஹாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. அவர் இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 2010 முதல் 2014 வரை 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 41 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்து விக்கெட் கீப்பராக இருந்தார் என்பதை மறுக்க முடியாது. அவர் பேட்ஸ்மேன் ஆக அதிக ரன் குவிக்கவில்லை என்ற காரணத்தால் தான் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது இடத்தை ரிஷப் பண்ட் நிரப்பி இருக்கிறார். ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் சாஹாவுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. மேலும், மாற்று விக்கெட் கீப்பர்களாக ஸ்ரீகர் பாரத், துருவ் ஜுரல் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் ஓய்வை அறிவித்து இருக்கும் அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், "நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி டிராபி சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக ஆட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார். விரித்திமான் சாஹாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.