மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், சிஎஸ்கே அணியின் முன்னணி வீரருமான ரவீந்திர ஜடேஜா பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள சம்பவம் உறுதியாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் உறுப்பினர் அட்டையை அவரது மனைவியும், பாஜக எம்எல்ஏ-யுமான ரிவாபா ஜடேஜா சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. 2009ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ரவீந்திர ஜடேஜா, இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,036 ரன்களும், 294 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் 197 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 2,756 ரன்களையும், 220 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

74 டி20 போட்டிகளில் விளையாடி 54 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 240 போட்டிகளில் விளையாடி 2,959 ரன்களையும், 160 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். 2023ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததை எந்த சிஎஸ்கே ரசிகனாலும் மறக்க முடியாது.
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி வீரராகவே ஜடேஜா வலம் வருகிறார். இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலும், பாஜகவில் இதுவரை இணையாமல் அமைதி காத்து வந்தார்.
ஆனாலும் மனைவி ரிவாபாவுக்காக தேர்தல் பிரச்சாரம், ராமர் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட விஷயங்களில் பாஜகவுடன் நெருங்கிய நட்பிலேயே ஜடேஜா இருந்து வந்தார். கிட்டத்தட்ட 36 வயதினை நெருங்கிவிட்ட ஜடேஜா, தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. அதற்கேற்றபடி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
இதனை அவரது மனைவி ரிவாபா ஜடேஜா அதிகாரப்பூர்வமாக சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பாஜக உறுப்பினர் அட்டையுடன் சேர்த்து, ஜடேஜாவின் பாஜக உறுப்பினர் அட்டையையும் வெளியிட்டுள்ளார். செப்.2ஆம் தேதி ஜடேஜா பாஜகவில் இணைந்திருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே 2022 குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவாபா பாஜக சார்பாக ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டார் வெற்றிபெற்றார். அதற்காக ஜடேஜா காயத்தையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் ஜடேஜா அதிகாரப்பூர்வமாகவே பாஜகவில் இணைத்துக் கொண்டிருக்கிறார்.
இதனால் அடுத்த தேர்தலில் ஜடேஜாவும் தேர்தலில் போட்டியிடுவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் ஜடேஜாவின் சகோதரி காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிலையில், ஜடேஜா பாஜகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தினருடனும், பெற்றோருடனும் ஜடேஜா எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.