பாட்னா : பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷனின் சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த இளம் வீரர் இஷான் கிஷன் ஒழுங்கீன பிரச்சனை காரணமாக பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மனசோர்வு காரணமாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து பாதியுடன் விலகிய இஷான் கிஷன், இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்ட போது ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட முன் வரவில்லை. இதனால் இஷான் கிஷன் மீது பிசிசிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இஷான் கிஷன் சி கிரேடு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன் மூலமாக ரூ.1 கோடி வருமானம் ஈட்டி வந்தார். தற்போது இஷான் கிஷனின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதால், அவரின் வருமானம் குறைந்துள்ளது. ஆனாலும் இதுவரை இஷான் கிஷன் ஈட்டிய வருமானமே ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்காக ரூ.35 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் இஷான் கிஷன்.
அதன்பின் மும்பை அணியால் ரூ.15.75 கோடிக்கு இஷான் கிஷன் ஏலத்தில் வாங்கப்பட்டார். இதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக விளையாடும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறார். அதேபோல் இஷான் கிஷன் பயன்படுத்தி வரும் பேட்டில் சியட் நிறுவன ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதன் மூலமாக ரூ.1 கோடி வருமானம் பெற்று வருகிறார்.
அதேபோல் எஸ்ஜி ஸ்போர்ட்ஸ், மான்யவர், ஓப்போ இந்தியா, நாய்ஸ், பிலிட்ஸ்போல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இஷான் கிஷன் செயல்பட்டு வருகிறார். அதேபோல் ரியல் எஸ்டேட் தொழிலில் பல்வேறு முதலீடுகளையும் இஷான் கிஷன் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாட்னாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடியிருந்து வரும் இஷான் கிஷன், மும்பையின் மலட் பகுதியிலும் வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அதேபோல் ரூ.1 கோடி மதிப்பிலான மெர்சிடஸ் பென்ஸ் சி கிளாஸ் , ரூ.92 லட்சம் மதிப்பிலான ஃபோர்ட் மஸ்டாங் மற்றும் ரூ.72 லட்சம் மதிப்பிலான பிஎம்டபிள்யூ 5 கார் வைத்துள்ளார். இதனால் ஜனவரி மாதம் வரையிலான இஷான் கிஷனின் சொத்து மதிப்பு ரூ.66 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் இஷான் கிஷனிடம் இவ்வளவு சொத்துக்களா என்று ரசிகர்கள் பலரும் வியந்துள்ளனர்.