அகர்தலா : இந்திய அணியின் இளம் வீரர் மயங்க் அகர்வால் 48 மணி நேரத்திற்கு பேச முடியாது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 முதல் 2022 வரை இந்திய அணியின் தொடக்க வீரராக செயல்பட்டவர் மயங்க் அகர்வால். 2018-19 சுற்றுப்பயணத்தின் போது ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொடரை கைப்பற்றியதற்கு மயங்க் அகர்வாலும் முக்கிய காரணம். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர், தற்போது ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.

திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடகா அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றிக்கு பின் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்காக குஜராத் மாநில சூரத்திற்கு சக வீரர்களுடன் மயங்க் அகர்வால் மற்றும் அணி நிர்வாகிகள் விமானம் ஏறியுள்ளனர். அப்போது விமானத்தில் குடிநீர் கொண்டு வருமாறு கேட்க, அதனை குடித்த சிறிது நேரத்திலேயே தொண்டை மற்றும் நாவில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அந்த தண்ணீரை துப்பிய நிலையிலும், எரிச்சல் குறைந்தபாடில்லை. இதன்பின் விமான பணிப்பெண்ணிடம் விஷயத்தை கூற, உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின், மயங்க் அகர்வால் தண்ணீருக்கு பதிலாக ஆசிட்டை குடித்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட அவர், அபாய கட்டத்தை கடந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் குடிநீருக்கு பதிலாக ஆசிட் வழங்கப்பட்டது குறித்து மயங்க் அகர்வால் தரப்பில் காவல்துறையிடமும் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகா அணியின் மேனேஜர் தரப்பில், மயங்க் அகர்வால் 48 மணி நேரத்திற்கு பேச முடியாது. புண்கள் மற்றும் வீக்கம் குறைந்த பின்னரே அவரால் பேச முடியும்.
இதனால் அடுத்த போட்டியில் மயங்க் அகர்வால் பங்கேற்க முடியாது. நேராக பெங்களூரு புறப்படும் அவர், அடுத்த சில நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார். இந்த ரஞ்சி சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள மயங்க் அகர்வால், 460 ரன்களை குவித்து மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். அவருக்கு இப்படி நடந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.