ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமிக்கு ஈமெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் அல்லது கொன்று விடுவோம் என மிரட்டல் ஈமெயில் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, முகமது ஷமியின் சகோதரர் ஹாசிப் இது தொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ராஜ்புத் சிந்தர் என்பவர் இந்த மிரட்டல் ஈமெயிலை அனுப்பியிருக்கிறார். தற்போது முகமது ஷமி 2025 ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் நிலையில் அவருக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருக்கிறார் முகமது ஷமி.

அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இந்த ஆண்டு முகமது ஷமியின் செயல்பாடு மிகவும் சராசரியாகவே உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அவரது பௌலிங் சராசரி படுமோசமாக 56.17 ஆக உள்ளது.
2025 ஐபிஎல் தொடருக்கு முன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முகமது ஷமி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டிருந்தார். அப்போது 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணிக்காக சிறப்பாகச் செயல்பட்ட அவர், ஐபிஎல் தொடரில் மிகவும் சராசரியாகச் செயல்பட்டு வருகிறார்.
முகமது ஷமிக்கு மிரட்டல் ஈமெயில் விடுக்கப்பட்டது போலவே சில நாட்களுக்கு முன்பு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் மிரட்டல் ஈமெயில் அனுப்பப்பட்டிருந்தது. அவர் காஷ்மீர் தாக்குதல் விவகாரம் குறித்து கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.