மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒன் டே கோப்பைத் தொடரில் காயமடைந்து வீடு திரும்பிய இந்திய வீரர் பிரித்வி ஷாவின் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய யு19 அணி கேப்டனாக உலகக்கோப்பை வென்ற பின், 18 வயதிலேயே ஐபிஎல் ஒப்பந்தத்தை பெற்றார் பிரித்வி ஷா. அதன்பின் அதே ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே அதிரடி சதம் விளாசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த சச்சின் கிடைத்துவிட்டார் என்று அனைவரையும் பாராட்டிய நிலையில், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி வாழ்க்கையை தொலைத்தார்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்கு பின் கிரிக்கெட் களம் திரும்பிய பிரித்வி ஷாவிற்கு பேட்டிங் மட்டும் கைகூடவே இல்லை. ஐபிஎல், உள்ளூர் கிரிக்கெட் என்று விளையாடிய அனைத்து தொடர்களிலும் சொதப்பலுக்கு மேல் சொதப்பலாக விளையாடினார். இந்த நிலையில் தியோதர் டிராபியில் கூட பங்கேற்காமல் திடீரென இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.
அங்கு ராயல் லண்டன் ஒன் டே கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் 153 பந்துகளில் 28 பவுண்டரிகள், 11 சிக்சர்களுடன் 244 ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம் இங்கிலாந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதனையடுத்து டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் பிரித்வி ஷா விரைவில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரித்வி ஷா டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் காயம் காரணமாக நாடு திரும்பிய பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அதில், வாழ்க்கையில் மேலே செல்லும் போது பலரும் கைகளை தூக்கிவிடுகிறார்கள். ஆனால் படிகளில் இருந்து கீழே இறங்கினால் கூட மொத்தமாக விட்டு செல்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே சாய் பாபா பக்தர் என்று பிரித்வி ஷாவை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் பிரித்வி ஷா புலம்பி வருவதால், மீண்டும் ரசிகர்கள் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர்.