டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான், தான் காதலிப்பதை உறுதிசெய்து தனது காதலியை உலகுக்கு அறிமுகம் செய்திருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சோஃபி ஷைன் என்பவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'இவர்தான் எனது காதல்' எனப் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களாக ஷிகர் தவான் வெளிநாட்டுப் பெண் ஒருவருடன் வெளியிடங்களுக்கு ஒன்றாகச் சென்று வருவது குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. அவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்விகளுடன் ரசிகர்களும் பல்வேறு சமூக வலைத்தளப் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான், அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் தனது காதல் உறவை பொதுவெளியில் அறிவித்திருக்கிறார் ஷிகர் தவான். யார் இந்த சோஃபி ஷைன்? சோஃபி ஷைன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். தயாரிப்பு ஆலோசகராக இருக்கிறார். இவர் நார்தன் டிரஸ்ட் கார்ப்பரேஷன் என்ற அமெரிக்க நிதி நிறுவனத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் இருக்கிறார்.
ஷிகர் தவான் துபாய்க்குச் சென்றிருந்த போது, அங்கு சோஃபி ஷைனை சந்தித்ததாகவும், அதன் பின் அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து, பின்னர் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஷிகர் தவான் 2021 ஆம் ஆண்டில் தான் தனது முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜியைப் பிரிந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளார்.
அவர்களது திருமண வாழ்வில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிலையில், அங்கு பல்வேறு சொத்துக்களை வாங்கி வந்ததாகவும், அது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாகவும் அப்போது கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
தனது மகனைச் சந்திக்கும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனைப் பார்க்காமலும் பேசாமலும் இருந்து வருவதாகவும் ஷிகர் தவான் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், அவர் தற்போது மீண்டும் காதல் வலையில் சிக்கியிருக்கிறார். ஷிகர் தவானின் இந்த புதிய வாழ்க்கைக்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.