மும்பை: 2008, ஆகஸ்ட் 18.. சர்வதேச கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனான விராட் கோலி இந்தியாவுக்காக அறிமுகம் செய்யப்பட்ட நாள்.. தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் சிபி சீரிஸ் உள்ளிட்டவைற்றை வென்ற பின், உச்சக்கட்ட ஃபார்மில் இந்திய வீரர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிந்தனர்.
அப்போது சச்சின், சேவாக் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, இந்திய இளம் அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அந்தத் தொடரில் 19 வயதேயான இளம் வீரரான விராட் கோலியையும் இந்திய அணி அழைத்து சென்றது. தொடரை வென்ற பின் வாய்ப்பு கொடுக்காமல், முதல் போட்டியிலேயே விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கினார் தோனி.

முதல் போட்டியில் கம்பீருடன் தொடக்கம் கொடுத்த கொடுத்த விராட் கோலி, 22 பந்துகளுக்கு வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அன்று யாருக்கும் தெரியவில்லை. தனது அரியாசனத்திற்கான தொடக்க புள்ளியை விராட் கோலி பதிவு செய்தார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அங்கு தொடங்கிய பயணம், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் உச்சத்தை எட்டியது.
சச்சின், சேவாக், டிராவிட், கம்பீர் என்று ஒவ்வொரு வீரராக இந்திய அணியில் இருந்து வெளியேறிய போது, விராட் கோலி என்னும் ஒற்றை மனிதனை நம்பியே இந்திய அணி கிரிக்கெட் சுழன்று வந்தது. தோனியும், ரெய்னாவும் ஆங்காங்கே சிறப்பாக விளையாடினாலும், இந்திய பேட்டிங்கின் முகமாக விராட் கோலி இருந்தார், இருக்கிறார். ஒவ்வொரு தொடருக்கும் ஒரு சதம், 2 அரைசதங்கள் என்று விளாசி தள்ளினார். சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் நெருங்க கூட முடியாத சச்சினின் சாதனைகளை கண் இமைக்கும் நொடிகளில் தகர்த்தார் விராட் கோலி.
அதுதான் இந்திய கிரிக்கெட்டின் இளவரசனாக விராட் கோலியை மாற்றியது. ஆனால் கேப்டன் என்ற கிரீடமும், டெஸ்ட் கிரிக்கெட் டுக்கு விராட் கோலி அளித்த முக்கியத்துவமும் அவரை கிரிக்கெட்டின் மாமன்னனாகவே மாற்றியது என்று கூறலாம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை என்று விராட் கோலி சதம் விளாசிவிட்டு அலப்பறை கொடுக்காத மைதானங்களே இல்லை என்ற நிலை உருவாகியது. ஆனா விராட் கோலியின் பசி ஒருபோதும் அடங்கவில்லை.
வெளிநாட்டில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற விராட் கோலி தனது கனவை நோக்கி ஓடினார். அந்த கனவு 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நனவாக தொடங்கியது. அங்கிருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை தனி மனிதனாக வேட்டையாடினார் என்றே சொல்லலாம். இவ்வளவு வெறியுடன் இருந்த விராட் கோலிக்கு கொரோனா காலத்தில் கொஞ்சம் துவண்டு விட்டார். ஆனால் ரசிகர்கள் மீண்டும் மைதானத்தில் குவிய தொடங்கிய பின், விராட் கோலிக்குள் இருந்த பீஸ்ட் மீண்டும் வெளி வந்துள்ளது.
15 ஆண்டுகளில் விராட் கோலி அளவிற்கு உச்சத்தை தொட்ட வீரர் யாருமே கிடையாது. அதேபோல் விராட் கோலியை போல் விமர்சிக்கப்பட்ட வீரரும் யாரும் கிடையாது. அடுத்த விராட் கோலி தயாராகிவிட்டார் என்று சுப்மன் கில், ஜெய்ஸ்வால் என்று யார் யாரையோ சொல்லி வருகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் விராட் கோலியாக வர வேண்டும் என்றால், அதற்கு அவர் விராட் கோலியாக மாற வேண்டும். ஆனால் விராட் கோலி ஒருவர் தான்.