அகமதாபாத்: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் 35 வயதான குஜராத்தைச் சேர்ந்த பிரியங்க் பாஞ்சால் ஓய்வை அறிவித்திருக்கிறார். வலது கை பேட்ஸ்மேனான அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடிய புள்ளிவிவரங்களை வைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரியங்க் பாஞ்சால், அந்த அணிக்காக 100-க்கும் அதிகமான முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணியில் ஒருமுறை மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டும், அவருக்கு போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுவே அவருக்கு இந்திய அணியில் கிடைத்த அதிகபட்ச வாய்ப்பாக இருந்தது.

பிரியங்க் பாஞ்சால் 127 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8856 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 45.18 என்பதாக உள்ளது. 29 சதங்கள் மற்றும் 34 அரை சதங்களை அடித்திருக்கிறார். 2016 மற்றும் 17 ஆம் ஆண்டில் நடந்த ரஞ்சித் தொடரில் அவர் 1310 ரன்கள் அடித்திருந்தார். அந்த ஆண்டு குஜராத் அணி ரஞ்சி டிராபியை வென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும், விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரையும், சையது முஷ்டாக் அலி டி20 தொடரையும் குஜராத் அணி வென்றபோது, அதில் பிரியங்க் பாஞ்சால் முக்கிய வீரராக இடம் பெற்றிருந்தார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய அணிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காத நிலையில் தனது 35-வது வயதில் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து இருக்கிறார்.
பிரியங்க் பாஞ்சால் 97 லிஸ்ட் 'ஏ' எனப்படும் உள்நாட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3672 ரன்கள் சேர்த்து இருக்கிறார். 59 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அதில் 1522 ரன்கள் சேர்த்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடியதில்லை.
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஜாம்பவானாக இருந்து இந்திய அணியில் வாய்ப்பு பெறாமல் ஓய்வு பெற்ற பல வீரர்களின் பட்டியலில் பிரியங்க் பாஞ்சாலும் இணைந்துள்ளார். சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றனர். அவர்களைப் போல இந்திய அணியில் இடம் பெற்று தன்னை நிரூபிக்கும் வாய்ப்பை பெறாத நிலையில் பிரியங்க் பாஞ்சால் ஓய்வு பெற்று இருக்கிறார். குஜராத் கிரிக்கெட் அமைப்பு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறது.