மத ரீதியாக தாக்கிய ரசிகர்கள்.. சங்கடத்தில் முகமது ஷமி கொடுத்த ரியாக்ஷன்.. குவியும் கண்டனங்கள்!
அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை மத ரீதியாக ரசிகர்கள் வம்பிற்கு இழுத்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா - சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்களை குவித்தனர்.

4வது டெஸ்ட் போட்டி
இந்த போட்டியின் போது விராட் கோலிக்காக ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பியது, காணாமல் போன பந்தை சிரமப்பட்டு தேடிக்கொடுத்தது என பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. ஆனால் இந்த நல்ல விஷயங்களையெல்லாம் தாண்டி மோசமான செயல் ஒன்று அரங்கேறியுள்ளது. 2வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் பவுண்டரி எல்லைக்கு அருகே நின்று ஆலோசனை நடத்தி வந்தனர். சிலர் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அப்போது முகமது ஷமியை சிலர் அழைத்து பேசினர்.

மத பிரச்சினை
ஷமியை பார்த்த சில ரசிகர்கள் திடீரென அவரின் பெயரை உச்சரித்து " ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம்" என ஆக்ரோஷமாக கத்தினர். நம் ரசிகர்களே பிரச்சினைக்கு வருகிறார்கள் என நினைத்த ஷமி மன வருத்தத்துடன் கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். இதன் பின்னர் சூர்யகுமாரிடம் ரசிகர்கள் குரல் எழுப்ப, அவர் கைகளை அசைத்தும், வணக்கம் கூறியும் சென்றுவிட்டார்.

இது முதல்முறையல்ல
இதனை பார்த்த வல்லுநர்கள் இந்திய ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் முகமது ஷமி இதுபோன்று பாதிக்கப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் ஷமி சற்று மோசமாக பந்துவீசியதால், அவர் தான் காரணம் எனக்கூறி படு மோசமாக விமர்சித்தனர்.

வீரர்கள் ஆதரவு
இந்த சம்பவத்தை பார்த்த முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் அணிகள், விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் ஆதரவுக்குரல் கொடுத்தனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமே ஆதரவு தந்திருந்தார். எனினும் பிசிசிஐ விதிமுறைப்படி இந்திய வீரர்கள் இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்பதால் அமைதி காத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications