ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது முதலே இந்திய ரசிகர்களின் அன்பை கண்டு நெகிழ்ந்துவிட்டதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தியா வந்துள்ளனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வருகை இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியா வரவில்லை. அந்த அணியில் ஆகா சல்மான் மற்றும் முகமது நவாஸ் மட்டும் இதற்கு முன் இந்திய மண்ணில் விளையாடியுள்ளனர்.

இந்த நிலையில் முற்றிலும் புதிய வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி 7 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக இந்தியா வந்திருக்கிறது. இதனால் இந்திய மண்ணில் முத்திரை பதிக்க பாகிஸ்தான் வீரர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேற்று விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 94 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன்பின் முகமது ரிஸ்வான் பேசுகையில், ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய போதே இந்திய ரசிகர்கள் அன்பை பொழிந்துவிட்டார்கள். பாகிஸ்தானில் ரசிகர்களிடம் இருந்து எப்படியான அன்பு கிடைக்குமோ, அதே அன்பும், வரவேற்பும் இந்தியாவில் பெற்று வருகிறோம். அதேபோல் நாங்கள் மிகச்சிறந்த முறையில் வரவேற்கப்பட்டோம்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை சதம் அடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் பாகிஸ்தானுக்காக களமிறங்கி சதம் விளாசுவதே மகிழ்ச்சியான ஒன்று தான். பாகிஸ்தான் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்குவேன். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது 7வது வீரராக விளையாடுவேன். ஒருநாள் போட்டிகளில் நம்பர் 4 வீரராக இருக்கிறேன். எப்போதும் அணிக்கு தேவையான இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.