'பாகிஸ்தானுடன் கிரிக்கெட் வேண்டாம்' மோடிக்கு டுவிட் செய்த கிரிக்கெட் ரசிகர்கள் !
பெங்களூரு: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம் எனக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி பெரும் இழுபறிக்கு பின்னர் தொடரை பொதுவான இடமான இலங்கையில் நடத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் பொதுவான இடத்தில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரிப் ஏற்கனவே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்.

இந்த தொடர் பற்றி முறையான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. மத்திய அரசும் விரைவில் தனது ஒப்புதலை வழங்கும் என கூறப்படுகிறது.
ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லாவும் மேற்கூரிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவும் பாகிஸ்தானும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஒப்புக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் 3 ஒரு நாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய கொடூர தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இறந்தவர்களுக்கு மும்பையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம் எனக் கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரதமர் மோடிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இரு அணிகள் இடையே டெஸ்ட் தொடர் நடைபெறவில்லை. கடைசியாக 2007-ல் டெஸ்ட் தொடர் நடந்தது. ஒருநாள் தொடர் கடைசியாக 2012-ல் நடைபெற்றது. 3 ஆண்டு இடைவேளைக்கு பிறகு ஒருநாள் தொடர் டிசம்பரில் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications