முதல் டெஸ்ட் போட்டி
அந்த அணியில் டாப் லாதம் (1), வில் யங் (1), வில்லியம்சன் (2), டெவோன் கான்வே (3), டேர்யில் மிட்செல் (3) என முக்கிய வீரர்களே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை சமாளிக்கவே முடியவில்லை. கடைசி நேரத்தில் டி கிராண்ட் ஹோம் மட்டும் 42 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்ஸில் அந்த அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து மோசம்
இதன்பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ, நியூசிலாந்தே பரவாயில்லை என்பது போன்று செய்துவிட்டது. தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ் (24), சாக் க்ராவ்லே (43) மட்டுமே ரன் அடிக்க, மற்ற அனைவருமே ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். முதல் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து 116/7 ரன்களை மட்டுமே சேர்த்தது. முதல் நாளன்றே நியூசிலாந்து (10 ) மற்றும் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் என மொத்தம் 17 விக்கெட்கள் சரிந்து சுவாரஸ்யமே இன்றி சென்றது.
பழிதீர்த்த இந்திய ரசிகர்கள்
இந்நிலையில் இது இந்திய ரசிகர்களுக்கு பழிதீர்க்க சரியான நேரமாக மாறியுள்ளது. கடந்த 2021ல் இங்கிலாந்து - இந்தியா மோதிய 4 டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. சென்னை, அகமதாபாத் மைதான பிட்ச்கள் மிக மோசமாக இருந்ததாக இங்கிலாந்து வீரர்கள் விமர்சித்தனர். அதிலும் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஒருபடி மேல் சென்று மோசமாக விமர்சித்தார்.
மோசமான பதிவு
இந்தியா போன்ற பெரும் நாடுகள், மோசமான பிட்ச்-ஐ தயார் செய்து வெற்றி பெற்று வருகிறது. இதனை பற்களை பிடிங்கிய பாம்பை போன்று ஐசிசி வேடிக்கை பார்த்து வருகிறது. இதனை கேட்பதற்கு யாரும் இல்லையா? என கடும் கோபத்துடன் சாடியிருந்தார். இந்த சூழலில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் பிறப்பிடமாக பார்க்கப்படும் லார்ட்ஸ் மைதானத்திலேயே இந்த தவறு நடந்துள்ளது.
உங்களுக்கு தக்காளி சட்னியா
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் பிட்ச் மோசமாக தயாரிக்கப்பட்டுள்ளது, உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?, பேட்டிங் தவறுகளை மறைப்பதற்காக இந்திய பிட்ச்-ஐ குறை கூறினீர்கள். ஆனால் இன்று உங்களுக்கு நடந்தால் கண்டுக்கொள்ள மாட்டீர்களா? என வாகனை விளாசி வருகின்றனர்.