மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப், தனது கனவு காரான பிளாக் ஃபார்சூனரை வாங்கிய அடுத்த நாளிலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். அந்த காரினை முழுமையாக ரிஜிஸ்ட்ரேஷன் கூட செய்யாமல், அந்த டீலர் ஆகாஷ் தீப்புக்கு காரை விற்பனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் சில நாட்களுக்கு காரனை பயன்படுத்த வேண்டாம் என்று ஆகாஷ் தீப்புக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக ஆடிய இளம் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 3 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் மிக முக்கியமான அரைசதம் ஒன்றையும் விளாசி அசத்தினார்.

இதனால் முகமது ஷமிக்கு மாற்றாக ஆகாஷ் தீப் தயாராகிவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டினார். இதன்பின் இந்தியா திரும்பிய அவருக்கு குடும்பத்தினர் உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த நிலையில் இந்தியா திரும்பிய அவர், புதிதாக கருப்பு நிற ஃபார்சூனர் கார் ஒன்றை வாங்கினார். அந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்திருந்தார்.
அப்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறினர். இந்த நிலையில் புதிய கார் வாங்கிய பின், புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி இருக்கிறார். அதாவது ஆகாஷ் தீப்-க்கு புக் செய்து வரவழைக்கப்பட்ட கார், முழுமையாக ஆர்டிஓ அலுவலகத்தில் ரிஜிஸ்டர் கூட செய்யப்படவில்லை. அதற்குள் ஆகாஷ் தீப்புக்கு ரூ.62 லட்சத்திற்கு கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின் விற்பனை செய்த டீலருக்கு காவல்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து 14 நாட்களுக்கும் அந்த டீலர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆகாஷ் தீப் ஃபார்சூனர் காரை பயன்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.