டெல்லி: இந்திய அணிக்காக ஆடிய அசோக் டிண்டா குறித்து பெங்களுரு அணியின் ட்விட்டர் பதிவுக்கு அசோக் டிண்டா பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் உமேஷ் யாதவ், இந்த ஆண்டு தொடரின் தொடக்கத்திலிருந்தே பந்துவீச்சில் சொதப்பி வந்தார். முக்கியமாக சென்னை அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் 24 ரன்களை வாரி வழங்கினார்.

அதற்கு ரசிகர்கள் பலரும் இந்திய அணிக்கு ஆடிய டிண்டாவுடன் உமேஷ் யாதவை ஒப்பிட்டு இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களூரு அணியின் வெற்றிக்கு உமேஷ் யாதவ் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில், ரசிகர்களின் கிண்டலுக்கு பதிலளிக்கும் விதமாக, உமேஷ் யாதவின் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களிடம் என்ன சொன்னீர்கள்? டிண்டாவின் அகாடமி? என பெங்களூரு அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.
அதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்த ட்வீட்டை பெங்களூரு அணி நிர்வாகம் நீக்கியது. தற்போது அசோக் டிண்டா தமது பேஸ்புக் பக்கத்தில் தனது சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.
அதனுடன், வெறுப்பாளர்கள் எனது புள்ளி விவரங்களை பாருங்கள். நீங்கள் பார்ப்பது உண்மையல்ல. எனவே உங்கள் பேச்சுக்களை நிறுத்தி கொள்ளுங்கள் என்று பதிவிட்டு பெங்களூரு அணிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.