டெல்லி: தினேஷ் கார்த்திக்கை போலவே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஓய்வுக்கு முன்பாகவே வர்ணனையாளராக களமிறங்குவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் ஜாகீர் கானுக்கு பின் தரமான வேகப்பந்துவீச்சாளராக உருவாகியவர் இஷாந்த் சர்மா. 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாடுகளில் தோனிக்கு உறுதுணையாக இருந்த ஒரே பந்துவீச்சாளரும் இஷாந்த் சர்மா தான். 34 வயதாகும் இஷாந்த் சர்மா, 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இளம் வீரர்களின் எழுச்சி காரணமாக இஷாந்த் சர்மா இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

இதனால் இந்திய அணியில் இஷாந்த் சர்மாவின் நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த பலருக்கும், ஐபிஎல் தொடர் மூலமாக அசத்தல் கம்பேக்கை கொடுத்தார் இஷாந்த் சர்மா. இன்னும் சொல்லப்போனால் டெல்லி அணிக்காக ஆடிய பந்துவீச்சாளர்களில் சிறப்பாக வீசிய ஒரே வீரர் இஷாந்த் சர்மா தான். இதனால் விரைவில் இஷாந்த் சர்மா இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இஷாந்த் சர்மா வேறு புதிய திட்டத்துடன் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா வர்ணனையாளராக அறிமுகமாவதாக தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இஷாந்த் சர்மா ஓய்வை அறிவிக்கப் போவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஓய்வை அறிவிப்பதற்கு முன் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக ஸ்கை ஸ்போர்ட்ஸ்-ல் பணியாற்றி வருகிறார். ஆஷஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உள்ளிட்டவற்றுக்கு தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட்டார். தற்போது அவரை பின்பற்றி இஷாந்த் சர்மாவும் ஓய்வுபெறுவதற்கு முன் வர்ணனையில் களமிறங்கியுள்ளார். இதுவொரு பக்கம் இருந்தாலும், ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மா தொடர்ந்து பங்கேற்பார் என்று எதிர்பார்க்கலாம்.