பெங்களூரு: இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, தனது நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். பெங்களூருவில் தென்னிந்திய முறைப்படி நடந்த திருமணத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இது கல்யாண சீசன் போல.. ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியும் கிரிக்கெட் வீராங்கனையுமான உக்கர்ஷா பவாரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மற்றொரு இந்திய வீரரான பிரசித் கிருஷ்ணாவும் தனது காதலியை கரம் பிடித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணா, இந்திய கிரிக்கெட் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகினார். அதன்பின்னர் கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக பெரும் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியக் காரணமாக இருந்தார். ஆனால் யார் கண்பட்டதோ, காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கிறார். இதனால் ஐபிஎல் தொடரில் கூட பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான ரச்சனா கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். தென்னிந்திய முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரசித் கிருஷ்ணா மற்றும் ரச்சனா கிருஷ்ணா ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதையடுத்து இன்று இவர்களது திருமணம் பெரியோர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெல் டெக்னாலஜிஸ் கம்பெனியில் பிராஜக்ட் மேனேஜராக பணியாற்றி வருபவர் ரச்சனா கிருஷ்ணா. பொறியியல் பட்டதாரியான ரச்சனா, நிர்வாகம் தொடர்பாகவும் ஏராளமான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்களது திருமணத்தில் இந்திய அணியின் மயங்க் அகர்வால், பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், தேவ்தத் படிக்கல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.