பெங்களூர் : இந்திய முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் வீட்டின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 52 வயதாகும் டேவிட் ஜான்சன், வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
1996ஆம் ஆண்டு நடந்த ரஞ்சி டிராபி தொடரில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய டேவிட் ஜான்சன் மொத்தமாக 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பின் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட டேவிட் ஜான்சன், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார்.

தனது முதல் ஓவரிலேயே மணிக்கு 157.3 கிமீ வேகத்தில் வீசி அனைவரையும் பிரமிக்க வைத்தார். இந்திய கிரிக்கெட்டில் இதுவரை யாரும் இந்த வேகத்தை தொடவில்லை. டெல்லியில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் விக்கெட்டை மட்டுமே டேவிட் ஜான்சன் வீழ்த்திய போதும், தொடர்ந்து தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கும் தேர்வானார். டர்பன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் ஜான்சனுக்கு அதுவே கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
அதன்பின் 2001-02 ரஞ்சி சீசன் வரை கர்நாடகா அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வந்தார்.டேவிட் ஜான்சன், ஜவஹல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஒரே நேரத்தில் கர்நாடகா அணிக்கு விளையாடியதால், அந்த அணி மும்பைக்கு நிகராக வளர்ந்தது. அதன்பின் 2009ஆம் ஆண்டு கர்நாடகா பிரீமியர் லீக் தொடரில் பெலகாவி பேந்தர்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டேவிட் ஜான்சன், பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.
இதனால் நண்பர்கள் சிலர் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளனர். அதன்பின் 3 பிள்ளைகள் மற்றும் மனைவி ஆகியோர் கவனித்து வந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் டேவிட் ஜான்சனுக்கு உடல்நிலை பிரச்சனைகளும் தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேவிட் ஜான்சன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் ஹென்னூரில் உள்ள தனது வீட்டின் 3வது மாடியில் இருந்து டேவிட் ஜான்சன் கீழே விழுந்துள்ளார். இதன்பின் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் டேவிட் ஜான்சன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரணையும் நடந்து வருகிறது.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தனது எக்ஸ் பக்கத்தில், சக கிரிக்கெட் வீரரான டேவிட் ஜான்சனின் உயிரிழப்பால் வருத்தமடைகிறேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் இருந்து வேகமாக போய்விட்டாய் பென்னி என்று பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.