ஆண்ட்வெர்ப்: பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் ஹாக்கி உலக லீக் அரையிறுதிப் போட்டியில், ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியும், சாம்பியன்ஸ் டிராஃபியில் வெள்ளி பதக்கம் வென்ற பாகிஸ்தானும் மோதுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்திய அணி இதுவரை விளையாடிய 2 லீக் ஆட்டங்களிலும் (பிரான்ஸ் மற்றும் போலந்துக்கு எதிராக) வெற்றி பெற்று முழு உத்வேகத்துடன் உள்ளது.
பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் போலந்தை வென்றது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது.
இன்றைய போட்டி குறித்து பேசிய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டதாகவும், இருப்பினும் இன்று நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி உலக லீக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு வாய்ப்பு என்பதால் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்றும் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை முதல் முறையாக நேரில் பார்க்க உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஸ் தெரிவித்தார். இந்திய இளம் வீரர்கள் முழு பலத்துடன் விளையாடி வருவதாகவும் அவர் பாராட்டினார்.