மும்பை: இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாக இருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஜெர்சியில் தங்களது நிறுவனத்தின் பெயரைப் இடம்பெறச் செய்ய, நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றன. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பைப் பெறுவது பல நிறுவனங்களின் கனவு. ஆனால், வரலாறு என்ன சொல்கிறது என்றால், அந்தக் கனவு பெரும்பாலும் அந்த நிறுவனங்களின் சரிவிலேயே முடிந்துள்ளது.
ஆம், 2001-ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் டைட்டில் ஸ்பான்சராக இருந்த பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது ஒப்பந்த காலம் முடிவதற்கு முன்பாகவே சர்ச்சைகள், நிதி நெருக்கடிகள் அல்லது கொள்கை மாற்றங்கள் காரணமாக விலகியுள்ளன. சமீபத்திய வரவான ட்ரீம்11 நிறுவனமும் இந்த ராசியில்லாத பட்டியலில் இணைந்துள்ளது.

சஹாரா (2001-2012):
இந்திய ஜெர்சியில் நீண்ட காலமாக நீடித்த பெயர் சஹாரா. ஆனால், 2012-ல் செபி (SEBI) எடுத்த அதிரடி நடவடிக்கைகள், அந்த நிறுவனத்திற்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் நிறுவனர் சுப்ரதா ராய் 2014-ல் கைது செய்யப்பட்டது வரை நிலைமை மோசமடைந்தது. இதனால், பிசிசிஐ உடனான தனது ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து சஹாரா விலகியது.
ஸ்டார் இந்தியா (2014-2017):
ஒளிபரப்புத் துறையில் ஜாம்பவானாக இருந்த ஸ்டார் இந்தியா, அடுத்த ஸ்பான்சராக வந்தது. ஆனால், நிதி அழுத்தம் மற்றும் இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) விசாரணைகள் காரணமாக, அவர்களாலும் இந்த ஸ்பான்சர்ஷிப்பைத் தொடர முடியவில்லை.
ஒப்போ (2017-2020):
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ, ரூ.1,079 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்தியா-சீனா இடையே எல்லைப் பதற்றம் அதிகரித்தபோது, இந்த ஒப்பந்தம் திடீரென முடிவுக்கு வந்தது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது.
பைஜூஸ் (2020-2022):
கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ், பெரும் ஆரவாரத்துடன் ஸ்பான்சர்ஷிப்பைக் கைப்பற்றியது. ஆனால், தொடர் நஷ்டம், பணம் செலுத்துவதில் தாமதம் மற்றும் திவால் மனுக்கள் என அந்த நிறுவனம் பெரும் சரிவைச் சந்தித்தது. பிசிசிஐ-க்கு செலுத்த வேண்டிய ரூ.158 கோடி பாக்கிக்காக, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் பிசிசிஐ வழக்குத் தொடரும் அளவிற்கு நிலைமை மோசமானது.
ட்ரீம்11 (2023-2025):
இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பது ட்ரீம்11. "ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025" சட்டமாகியதைத் தொடர்ந்து, உண்மையான பணத்தை வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆசியக் கோப்பை தொடங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், ட்ரீம்11 நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியுள்ளது.
இது வெறும் தற்செயல் நிகழ்வுகளா அல்லது இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் என்பது நிறுவனங்களுக்கு ஒரு ராசியில்லாத அடையாளமா என்ற கேள்வி கிரிக்கெட் மற்றும் வர்த்தக வட்டாரங்களில் மீண்டும் எழுந்துள்ளது.