
உலக கபடி சாம்பியன்ஷிப் தொடர்
2020 உலக கபடி சாம்பியன்ஷிப் தொடர் பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் நடைபெற உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட உலக கபடி சாம்பியன்ஷிப் தொடர்தானா? என்பதிலும் சந்தேகம் உள்ளது. இந்த தொடரில் பல்வேறு நாடுகள் கலந்து கொள்ள உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வந்தது..

பல நாடுகள்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், அசர்பெய்ஜான், சியர்ரா லியோன், கென்யா மற்றும் கனடா ஆகிய நாடுகள் கலந்து கொள்ள உள்ளதாக போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அமைப்பின் நிர்வாகிகள் கூறினர். இதில் பங்கேற்கவே இந்திய கபடி வீரர்கள் பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

அனுமதி வழங்கவில்லை
இந்திய அமெச்சூர் கபடி அமைப்பு தான் இந்தியாவில் அனைத்து கபடி வீரர்களையும் கட்டுப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு எந்த கபடி வீரர்களுக்கோ, இந்திய கபடி அணிக்கோ பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆனால், சுமார் 60 கபடி வீரர்கள் வரை பாகிஸ்தான் சென்றுள்ளதாக தெரிகிறது.

வாகா எல்லை வழியாக…
திங்கள் கிழமை அன்று பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் உள்ள பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் இந்த உலக கபடி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கடந்த பிப்ரவரி 8 அன்று பல கபடி வீரர்கள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றுள்ளனர்.

விசா எப்படி கிடைத்தது?
அந்த இந்திய கபடி வீரர்களுக்கு பாகிஸ்தான் செல்ல விசா எப்படி கிடைத்தது? கபடி விளையாடச் செல்வதாக அவர்கள் விசா பெற்றார்களா? அல்லது சுற்றுலா விசாவில் இந்திய எல்லையை கடந்தார்களா? என பல விடை தெரியாத கேள்விகள் உள்ளன.

பலத்த வரவேற்பு
இதற்கிடையே, பாகிஸ்தான் எல்லையை கடந்த அந்த வீரர்களுக்கு மாலையிட்டு பலத்த வரவேற்பு அளித்துள்ளது பாகிஸ்தான் கபடி கூட்டமைப்பு. பின்னர், அவர்கள் பாதுகாப்பு வாகனகங்களில் கவனமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அரசு அனுமதி பெற வேண்டும்
வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க வேண்டும் என்றால், தேசிய அளவிலான குறிப்பிட்ட விளையாட்டின் தேசிய அமைப்பு மூலமாக விளையாட்டு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். விளையாட்டுத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனுமதி பெற வேண்டும்.

திட்டமிட்டு செய்தனர்?
ஆனால், இப்படி எதுவுமே நடக்காத நிலையில், "இந்திய அணி" என பாகிஸ்தான் அதிகாரிகள் சிலர் கூறிக் கொள்ளும் இந்திய வீரர்கள் குழு அந்த சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகள் இதை திட்டமிட்டு செய்துள்ளதாகவே தெரிகிறது.
பஞ்சாப் வீரர்கள்
பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சர்க்கிள் முறையில் கபடி விளையாடும் இந்திய வீரர்களை தான் குறி வைத்து அழைத்துள்ளனர் பாகிஸ்தான் அதிகாரிகள். அவர்கள் எல்லையை கடக்கும் போது, அங்கேயே காத்திருந்து, கையோடு அவர்களை மாலை, மரியாதை செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வாய்ப்பு
இந்திய விளையாட்டு அமைச்சகம் அந்த வீரர்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என கூறி உள்ள நிலையில், அந்த வீரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சர்க்கிள் கபடி அணியில் 10 பேர் ஆட வேண்டும். 4 மாற்று வீரர்கள் தேவைப்படும். ஆக 14 வீரர்கள் மட்டுமே கொண்ட கபடி அணிக்கு ஏன் 60 வீரர்களை பாகிஸ்தான் அழைத்துள்ளது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











