
கேதார் ஜாதவ்
இந்திய அணியில் 2014இல் உள்ளே வந்தார். வயது 33 ஆகிவிட்டாலும், இவர் அதிரடியாக விளையாடும் திறமை உள்ளவர். இவருக்கு அணியில் அதிக போட்டிகள் ஆட வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டிங் ஆடும் வாய்ப்பு கொஞ்சம் குறைவாகவே கிடைத்துள்ளது. இன்னும் தன்னை பெரிய அளவில் நிரூபிக்கவில்லை. எனினும், இவரது இரண்டு சதங்கள் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக உள்ளது. இவர் ஒரு போட்டியிலாவது கடைசி வரை நின்று ஆடி அணியை ஜெயிக்க வைக்கவேண்டும்.

மனிஷ் பாண்டே
மனிஷ் பாண்டே 2015இல் இந்திய அணியில் நுழைந்துவிட்டார். எனினும், வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வரும் அவர் இதுவரை 22 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். இந்த அனுபவத்தோடு இவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு பெற வேண்டுமென்றால், இந்த ஆசிய கோப்பையில் இவர் அதிரடி காட்டியே ஆக வேண்டும். இவர் இதுவரை ஒரு சதம், 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

அம்பத்தி ராயுடு
அம்பத்தி ராயுடு 2013இல் தன் முதல் ஒருநாள் போட்டியில் ஆடினார். இதுவரை 34 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். மிக நீண்ட இடைவெளிக்கு பின் தன் ஐபிஎல் அதிரடியால் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் ஆடியதைப் போல முதிர்ச்சியான, எந்த பந்துவீச்சையும் துச்சமாக எண்ணி அடிக்கும் வகையில் ஆடினால், இவருக்கு உலகக்கோப்பை அணியில் இடம் உறுதி. ஒருவேளை, இந்த தொடரில் அம்பத்தி ராயுடு சரியாக ஆடவில்லை என்றால், இதுவே இவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கலாம்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற திறனின் அடிப்படையில் தான் அணியில் இடம் பிடித்துள்ளார். இவரால், இன்னும் ஒரு நிலையான பேட்ஸ்மேன் என நிரூபிக்க முடியவில்லை. எனினும், இவர் நிதாஸ் ட்ராபி இறுதியில் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த நினைவுகள் காரணமாக, இப்போது அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். அடுத்து ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற வரிசையில் காத்திருப்பதால், தினேஷ் கார்த்திக் கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் ரன் குவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். இந்த ஆசிய கோப்பை தொடரில் தோனி இருக்கும் போது, இவருக்கு களத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதும் சந்தேகமாக இருப்பது இவருக்கு பின்னடைவு.
இவர்களில் இரண்டு பேராவது இந்த தொடரில் தங்களை நிரூபித்தால் தான் இந்தியா நிம்மதியாக உலகக்கோப்பை கனவுகளில் மூழ்க முடியும்.


Click it and Unblock the Notifications