பெங்களூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் வரை போட்டி சென்றது. இதில் முதல் சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மா தாமாக ரிட்டையர்ட் அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால், விதியை மீறி அவர் மீண்டும் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார் என ஒரு விவாதம் கிளம்பி உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் என்ன நடந்தது என விளக்கம் அளித்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்ததால் போட்டி டை ஆகி, சூப்பர் ஓவருக்கு சென்றது. முதல் சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 17 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது, ரோஹித் சர்மா கடைசி பந்துக்கு முன்னதாக இரண்டு ரன்கள் ஓடினால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தன்னால் வேகமாக ஓட முடியாமல் போனால் ரன் அவுட் ஆகி விடுவோம் என்ற எண்ணத்தில் ரிட்டயர்ட் ஆகி வெளியேறினார். அவருக்கு பதில் ரிங்கு சிங் எதிர்முனையில் பேட்டிங் செய்ய வந்தார்.
சூப்பர் ஓவரில் ஒரு பேட்ஸ்மேன் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகும் முன் எதிரணி கேப்டனின் ஒப்புதலை பெற வேண்டும். ஆனால், ரோஹித் சர்மா அம்பயர்களிடம் மட்டும் கூறி விட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அப்படி செய்தால் அந்த வீரர் ரிட்டையர்ட் அவுட் ஆனதாகவே கருதப்படும். சூப்பர் ஓவர் விதிப்படி முதல் சூப்பர் ஓவரில் அவுட் ஆன ஒருவர், இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாது.
இந்த நிலையில், முதல் சூப்பர் ஓவர் டை ஆன நிலையில், இரண்டாவது சூப்பர் ஓவர் நடந்தது. ரோஹித் சர்மா விதிப்படி ரிட்டையர்ட் அவுட் ஆனாலும் இரண்டாவது சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய வந்தார். அம்பயர்கள் இதை தடுத்து இருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இது குறித்த விதிகள் தெளிவாக கூறப்படவில்லை.
இந்த நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், "ரோஹித் சர்மா ரிட்டையர்ட் ஹர்ட்டா? அல்லது ரிட்டையர்ட் அவுட்டா? என எனக்கு எனக்கு தெரியாது. இதற்கு முன் எப்போதும் இரண்டு சூப்பர் ஓவர் நடந்ததில்லை. இங்கே புதிய விதிகள் வந்து கொண்டே இருக்கின்றன. ரிட்டையர்ட் அவுட் விதி குறித்து எங்களுக்கு யாரும் சரியாக சொல்லவில்லை. ஆனால், இந்த விதிகள் இனி எழுத்துப் பூர்வமாக அளிக்கப்படும் என நினைக்கிறேன். இதுதான் விதி என்றால் அதை தான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் நன்றாக ஆடினோம். இங்கே விதிகள் பேசுபொருளாக இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன்" என்றார் ஜொனாதன் டிராட்.