மும்பை : 2024 டி20 உலகக்கோப்பைக்கான திட்டம் குறித்து பிசிசிஐ அதிகாரிகள், தேர்வுக் குழு, ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர். அதில் விராட் கோலியை டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப் போவதில்லை என்ற முடிவை தேர்வுக் குழு தெரிவித்து இருக்கிறது.
அதற்கு ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த முடிவு குறித்து விராட் கோலியிடம் பிசிசிஐ அதிகாரிகள் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் தான் விராட் கோலி கடைசியாக ஆடி இருந்தார். அந்த தொடரில் அதிக ரன் குவித்த வீரர் விராட் கோலி தான். ஆனாலும், அந்த தொடரில் அரை இறுதியுடன் இந்திய அணி வெளியேறியது. அப்போது இந்திய அணியில் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்ற விமர்சனம் எழுந்தது.
அதை தீவிரமாக எடுத்துக் கொண்ட பிசிசிஐ, 2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு டி20 அணியில் இடம் அளிக்கவில்லை. இத்தனைக்கும் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி டி20யில் ரன் குவிப்பில் முன்னணியில் இருக்கிறார். ஆனாலும், அவரை அணியில் சேர்க்கவில்லை.
இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை இன்னும் ஆறு மாதங்களில் துவங்க உள்ளது. அதற்குள் டி20 அணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ. ஆனால், இதுவரை டி20 அணியின் கேப்டன் கூட யார் என தெரியாத நிலையே உள்ளது. ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஹர்திக் பாண்டியா டி20 அணி கேப்டனாக செயல்படுவார் என கருதப்பட்ட நிலையில் அவர் வேகப் பந்துவீச்சாளராகவும் இருப்பதால் அடிக்கடி காயத்தில் சிக்கி அணியில் ஆட முடியாத நிலை ஏற்படுகிறது.
அதனால், கடந்த ஓராண்டில் மட்டும் டி20 அணிக்கு பல கேப்டன்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரு வலுவான தலைவர் இருந்தால் தான் அணி உலகக்கோப்பையில் சரியாக செயல்பட முடியும் என்பதால் மீண்டும் ரோஹித் சர்மாவை டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கும் முடிவில் இருக்கிறது பிசிசிஐ.
ஏற்கனவே, டி20 அணியில் துவக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருப்பதால் ரோஹித் சர்மாவும் அணியில் இணைவதால் இவர்கள் மூவருமே முதல் மூன்று இடங்களில் பேட்டிங் செய்ய வைக்கலாம் என பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது. அதனால், விராட் கோலிக்கு அணியில் இடம் இல்லாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.