மும்பை: 2025 ஆம் ஆண்டில் சாம்பியன்ஸ் ட்ராபி ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது. அதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் எட்டு முன்னணி அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த தொடருக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன.
இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை முடிந்ததிலிருந்து அந்த எட்டு மாத இடைவெளியில் இந்திய அணி வெறும் ஆறு ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. ஒரு நீண்ட ஒரு நாள் தொடருக்கு முன் வெறும் ஆறு போட்டிகளில் மட்டும் விளையாடுவது போதுமானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த எட்டு மாத கால இடைவெளியில் இந்திய அணி 16 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது, மேலும் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்துடன் ஆறு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடும் வகையில் அட்டவணை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
இது குறித்து பிசிசி தரப்பில் விளக்கம் அளித்த போது டி20 போட்டிகளுக்கு அதிக ரசிகர்கள் நேரில் வருவதோடு, விளம்பர வருவாயும் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டனர். அதே சமயம் ஒரு நாள் போட்டிகளுக்கு அத்தனை வருவாய் கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டினர். இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை சரியாக திட்டமிட வேண்டும், அதே சமயம் அது லாபகரமாகவும் இருக்க வேண்டும் என்பதால் அதிக டி20 போட்டிகளை திட்டமிட்டு இருப்பதாக அவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்திய அணி வரும் செப்டம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆட உள்ளது. அதன் பின் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த ஆறு போட்டி அனுபவத்தை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய வீரர்கள் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கு எப்படி தயாராக முடியும்?
இந்த முறை சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடக்க உள்ளது. அங்கு உள்ள சூழ்நிலை என்ன என்பது இந்திய வீரர்களுக்கு தெரியாது. விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் நிறைய ஒரு நாள் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். ஆனால், அணியில் இடம் பெறப்போகும் இளம் வீரர்கள் ஒரு நாள் போட்டி சூழ்நிலைகளை, அதன் அழுத்தங்களை அதிகம் சந்தித்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அனுபவம் தேவை என்பதை உணர்ந்தாவது அதிக ஒரு நாள் போட்டிகளை பிசிசிஐ திட்டமிட்டு இருக்க வேண்டும்.
இதனிடையே பிசிசிஐ மற்றும் பிற பலமான கிரிக்கெட் அமைப்புகள் இணைந்து சாம்பியன்ஸ் ட்ராபியை டி20 தொடராக மாற்ற முயன்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதை ஒரு நாள் தொடராக மட்டுமே நடத்துவோம் என பிடிவாதமாக இருப்பதாகவும், இது தொடர்பாக வரும் நாட்களில் விவாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.