சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்த தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ வி ராமன் நேர்முகத் தேர்வில் பிசிசிஐ அதிகாரிகளை ஈர்த்த போதும், அந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. அவருடன் விண்ணப்பம் செய்து இருந்த மற்றொரு முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பயிற்சியாளர் தேர்வு பிசிசிஐ விதிகளின்படி நடந்ததாகவே கருதப்பட்டது. ஆனால், இந்த தேர்வு நடைமுறை அனைத்துமே கண்துடைப்பு நாடகம்தான் என தற்போது பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்து உள்ளது. இதை அடுத்து தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ வி ராமன் ஏமாற்றப்பட்டாரா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் 2024 டி20 உலகக் கோப்பையுடன் பணியை நிறைவு செய்து விடை பெற்றார். அவருக்கு அடுத்து தலைமைப் பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததை அடுத்து பிசிசிஐ 2024 ஐபிஎல் தொடரின் இடையே பயிற்சியாளர் தேர்வுக்கான விண்ணப்பம் கோரியது. அதன் முடிவில் இருவரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்தது பிசிசிஐ.
அந்த இருவர் - கவுதம் கம்பீர் மற்றும் டபிள்யூ வி ராமன். இதில் கவுதம் கம்பீர் எந்த ஒரு அணிக்கும் பயிற்சியாளராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக மட்டுமே செயல்பட்டுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இரண்டு ஆண்டுகளும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக ஓர் ஆண்டும் அவர் பணியாற்றி இருக்கிறார்.
மறுபுறம் டபிள்யூ வி ராமன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அணிகளுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். மேலும், பிசிசிஐ-யின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்து, பல இளம் வீரர்களை உருவாக்கி இருக்கிறார். அடுத்து, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக இரண்டரை ஆண்டுகள் செயல்பட்டார்.
மேலும், அவர் நேர்முகத் தேர்வின் போது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அணியில் என்னென்ன செய்ய வேண்டும்? ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை எப்படி அணுக வேண்டும்? அவர்களுக்கு பின் எப்படி இளம் தலைமுறை வீரர்களை எப்படி உருவாக்க வேண்டும்? என முழு அளவிலான திட்டத்தை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. பிசிசிஐ-யின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் நேர்முகத் தேர்வின் போது அவர் சமர்ப்பித்த திட்டத்தை பார்த்து வியந்து போனதாகவும் தகவல் வெளியானது.
அதே சமயம் கவுதம் கம்பீர் பிசிசிஐ உயர் அதிகாரிகளின் நேரடி தொடர்பில் இருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால் அவர் இந்த நேர்முகத் தேர்வுக்கு முன்பே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமற்ற முறையில் தேர்வு செய்யப்பட்டு விட்டார். தகுதி அடிப்படையில் பார்த்தால் டபுள்யு வி ராமன் கம்பீரை விட அதிக அனுபவம் கொண்டவர். மேலும், நேர்முகத் தேர்விலும் அவர் முழு அளவிலான திட்டத்தை சமர்ப்பித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். ஆனால், அவரை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. மாறாக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் கவுதம் கம்பீரை பயிற்சியாளராக தேர்வு செய்ததற்கு பெரும் வரவேற்பு உள்ளது. அவர் சிறந்த பயிற்சியாளராக இருப்பார் என்ற எண்ணமும் உள்ளது. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. எனினும், கம்பீர் தான் பயிற்சியாளர் என முன்பே முடிவு செய்து விட்டால் டபுள்யூ வி ராமனை எதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்க வேண்டும்? அவரை தேர்வு செய்யப் போவதில்லை என்றால், நேரடியாக அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டு கவுதம் கம்பீர் விண்ணப்பம் மட்டுமே ஏற்கப்பட்டது என அறிவித்திருக்கலாம். ஆனால், ஜனநாயக முறைப்படி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுவதாக காட்டுவதற்காகவே ராமன் அலைக்கழிக்கப்பட்டுள்ளாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.