அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி வரும் ஜனவரி 25ஆம் தேதி முதல் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
பொதுவாக டெஸ்ட் அணிக்கு ஐந்து வேகப்பந்துவீச்சாளர்களை இந்திய அணி அறிவிக்கும். ஆனால் இம்முறை வெறும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் நிறுத்திக் கொண்டது. அதற்கு பதிலாக நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் முகமது சமி ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடவில்லை. அவர் முழு உடல் தகுதியை பெற்று விட்டாலும் அவருக்கு கூடுதல் ஓய்வை பிசிசிஐ வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் துரதிஷ்டவசமாக ரஞ்சி கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளையாடும் போது காயம் அடைந்து விட்டார். நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடகா அணிக்காக பிரசித் கிருஷ்ணா விளையாடினார். பிரசித் கிருஷ்ணா 14.5 ஓவர்களை வீசியபோது திடீரென்று அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் பிரசித் கிருஷ்ணாவால் நடக்கக்கூட முடியவில்லை. இதனை அடுத்து நொண்டியபடியே அவர் வீரர்கள் உடைமாற்றும் அறைக்கு சென்றார்.
பிரசித் கிருஷ்ணாவுக்கு தற்போது ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. பிரசித் கிருஷ்ணாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு பதில் அவேஷ் கானுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியில் நிறைய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த லிஸ்டில் தற்போது பிரசித் கிருஷ்ணாவும் இணைந்து இருப்பது தேர்வு குழுவினருக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.