மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக இரு நாட்கள் முன்பு பரவலாக தகவல் வெளியானது. அதனால், இந்திய ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருந்தனர். கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தால் இந்திய அணி நிச்சயம் உலகக்கோப்பை வெல்லும் என கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கவுதம் கம்பீர் அளித்த பேட்டி ஒன்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களை உறைய வைத்துள்ளது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கவுதம் கம்பீர் அந்த அணியுடன் இன்னும் பல ஆண்டுகள் பயணிக்க உள்ளதை அந்தப் பேட்டியில் சூசகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். அப்படி என்றால் அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்து விட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது வழிகாட்டுதலில் அந்த அணி ஐபிஎல் கோப்பை வென்றது. இது கொல்கத்தாவின் மூன்றாவது ஐபிஎல் கோப்பை ஆகும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று இருக்கும் நிலையில், இன்னும் மூன்று கோப்பைகள் வென்று அந்த அணிகளை முந்த வேண்டும் எனவும், அதற்கான பயணம் இப்போதுதான் துவங்கி இருக்கிறது எனவும் இந்த பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார் கம்பீர்.
இதை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இப்போது தான் பயணத்தை துவக்கி இருக்கிறது என சொல்வதன் மூலம் தான் கொல்கத்தா அணியுடன் நீண்ட காலம் ஆலோசகராக செயல்பட உள்ளதை அவர் சூசகமாக உணர்த்தி இருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் பட்சத்தில் கவுதம் கம்பீரால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது. பிசிசிஐ-யின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக வருபவர் கிரிக்கெட் சார்ந்த வேறு எந்த பதவியிலும் இருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கவுதம் கம்பீர் திட்டவட்டமாக தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன்தான் இனி பயணிக்க போகிறேன் என்றோ, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை தான் ஏற்கவில்லை என்றோ கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.