மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவர் விதித்துள்ள ஐந்து கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளியே கசிந்துள்ளது. அதில் மூத்த வீரர்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமியை ஒரு நாள் அணியில் இருந்தும் நீக்க அவர் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இன்னும் ஓராண்டில் அவர்களை டெஸ்ட் அணியில் இருந்தும் அவர் நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர்கள் நால்வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைக்கும் வகையில் உள்ளது. இதன் காரணமாகவே கவுதம் கம்பீரின் பயிற்சியாளர் நியமனம் குறித்து இதுவரை எந்த அறிவிப்வும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

கவுதம் கம்பீர் என்னென்ன கட்டுப்பாடுகள் விதித்தார்? என்பது குறித்து பார்க்கலாம்.
கம்பீர் விதித்த முதல் கட்டுப்பாடு - ஒட்டுமொத்த இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தையும் தன்னிடம் அளித்து விட வேண்டும். கிரிக்கெட் சார்ந்து இந்திய அணியில் என்னென்ன செய்ய வேண்டுமோ, அந்த முடிவுகள் அனைத்தும் கவுதம் கம்பீர் தான் எடுப்பார். அதில் பிசிசிஐ தலையிடக்கூடாது. குறிப்பாக, வீரர்கள் தேர்வில் பிசிசிஐ தலையிடக்கூடாது என கூறியிருக்கிறார்.
இரண்டாவது கட்டுப்பாடு - இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தான் பதவி ஏற்றால் துணை பயிற்சியாளர்கள், பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் என அனைவரையும் தன் விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்ய விட வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.
மூன்றாவது கட்டுப்பாடு - 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடஜா மற்றும் முகமது ஷமி சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்று தர வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்கள் நால்வரையும் ஒருநாள் அணியை விட்டு நீக்க வேண்டும். பிசிசிஐ அப்போது தலையிடக்கூடாது எனவும் கவுதம் கம்பீர் கட்டுப்பாடு விதித்து இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த நான்கு வீரர்களும் இந்திய அணியின் அனைத்து முக்கிய ஐசிசி தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்கள். ஆனாலும், இந்தியா கோப்பை வெல்லவில்லை. அதன் காரணமாக அவர்களுக்கு இந்த கட்டுப்பாடு விதித்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த எட்டு மாதங்களின் முடிவில் மூத்த வீரர்கள் நால்வரின் எதிர்காலம் என்ன என்பது தெரிந்துவிடும்.
நான்காவது கட்டுப்பாடு - தனி டெஸ்ட் அணி ஒன்றை உருவாக்க வேண்டும். அதாவது ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை. இதிலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏனெனில், தனி டெஸ்ட் டீம் அமைக்கப்பட்டால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியில் இருந்து நீக்கிவிட்டு அவர்களை டெஸ்ட் அணியில் மட்டும் ஆடுமாறு கூறுவார் கவுதம் கம்பீர். அதற்காகவே சாம்பியன்ஸ் ட்ராபி வரை அவர்களுக்கு கெடு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்து 2025 இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும். அதற்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில் அதிலும் இந்திய அணி கோப்பை வெல்ல வேண்டும். அதில் கோப்பை வெல்லத் தவறினாலும் இந்த நான்கு மூத்த வீரர்களை அதை சுட்டிக்காட்டி டெஸ்ட் அணியில் இருந்தும் நீக்குவார் கம்பீர். அவர் அதை வெளிப்படையாக கூறவில்லை என்ற போதும் அதற்காகத்தான் இவ்வாறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார் என்கிறார்கள்.
ஐந்தாவது கட்டுப்பாடு - கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பதவி ஏற்ற நாள் முதல் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான பணிகளை துவக்கி விடுவார். அதற்காக மட்டுமே இனி இந்திய அணி தேர்வு செய்யப்படும்.
இந்த ஐந்து கட்டுப்பாடுகளும் செயல்படுத்தப்பட்டால் இன்னும் ஓராண்டுக்குள் விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஒட்டுமொத்தமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அவர்களை நீக்கவே அந்த கடைசி மூன்று கட்டுப்பாடுகளையும் கம்பீர் கூறி இருக்கிறார். பிசிசிஐ இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக் கொள்ளுமா? என்பதே தற்போதைய கேள்வி.