மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய டி20 அணியின் துணை கேப்டனுமான ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான முகமது ஷமி மற்றும் ஷிகர் தவான் விவாகரத்தால் மன அழுத்தத்துக்கு ஆளாகி மீண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு செர்பிய நாட்டை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா. அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இருவருக்கும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் நடாஷா ஸ்டான்கோவிக் தற்போது வேறு ஒரு ஆண் நண்பருடன் டேட்டிங் செய்து வருவதாக சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
மேலும் ஹர்திக் பாண்டியாவை அவர் விவாகரத்து செய்தால் ஹர்திக் பாண்டியாவின் சொத்தில் 70 சதவீதம் நடாஷாவிற்கு சென்று சேரும் என கூறப்படுகிறது. இதற்கு முன் இந்திய அணியின் சிறந்த வீரர்களாக அறியப்பட்ட ஷிகர் தவான் மற்றும் முகமது ஷமி ஆகியோரும் இதே போல தங்கள் மனைவிகளுடன் விவாகரத்து வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.

ஷமியின் மனைவி அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்து கிட்டத்தட்ட அவரது கிரிக்கெட் வாழ்வையே நாசமாக்க முயன்றார். தற்சமயம் ஷமி அவரது மனைவிக்கு மாதா மாதம் பணம் அனுப்பி வருகிறார். அவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதே போல ஷிகர் தவான் தன் முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சமாக மிகப்பெரும் தொகையை அளித்து வருகிறார். ஏற்கனவே அவர் பல்வேறு சொத்துக்களை அவரது மனைவிக்கு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த வரிசையில் மூன்றாவதாக ஹர்திக் பாண்டியா சிக்கி உள்ளார். எனினும், ஹர்திக் பாண்டியா முன்னெச்சரிக்கையாக தான் வாங்கிய சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளில் எல்லாம் தன் தாயின் பெயரையும் இணைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
சொத்துக்கள் போனாலும் கூட இந்திய அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரர்களான இவர்கள் மனதளவில் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றனர். இவர்களால் ஒரே ஆண்டில் பல கோடிகளை சம்பாதிக்க முடியும். ஆனால், இவர்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்புகள், இவர்களின் கிரிக்கெட் வாழ்வையும் புரட்டி போட்டு விடுகிறது.

ஷிகர் தவான் இந்த காரணத்தால் தான் தற்போது இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் ஓய்வு மன நிலைக்கு சென்று விட்டார் என கூறப்படுகிறது. முகமது ஷமியும் தனது மனைவியுடன் நடந்த மோதலின் போது இந்திய அணியில் வாய்ப்பு இன்றி இருந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவி சர்ச்சையில் சிக்கி மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தனிப்பட்ட வாழ்விலும் பாதிப்பை சந்தித்து இருக்கிறார். இனி அவர் எப்படி இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.