மும்பை : ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டனாகி அப்படியே ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஆகி விடுவார் என பலரும் கூறிய நிலையில், அதற்கு பிசிசிஐ முட்டுக்கட்டை போட்டுள்ளது.
2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் ஆடி அரை இறுதியுடன் வெளியேறியது. அப்போதே பிசிசிஐ ஒரு அதிரடி முடிவை எடுத்தது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் அதிக இளம் வீரர்கள் கொண்ட அணியை தயார் செய்து அனுப்ப திட்டமிட்டது பிசிசிஐ.

அதன்படி ஹர்திக் பாண்டியா 2022 டி20க்கு பின் நடந்த சில டி20 தொடர்களில் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித் சர்மா, விராட் கோலி அதன் பின் டி20 அணியில் இடம் பெறவே இல்லை. இந்த நிலையில், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர் முடிந்த நிலையில், பிசிசிஐ அடுத்து டி20 உலகக்கோப்பைக்கான வேலைகளை துவக்கி உள்ளது.
ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கி இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆட முடியும். அடுத்து டி20 உலகக்கோப்பையில் தான் நேரடியாக பங்கேற்க முடியும். இடையே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அவரால் பங்கேற்க முடியாது.
இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டனாக தொடர் பயிற்சி இல்லாமல் ஹர்திக் பாண்டியாவை நேரடியாக உலகக்கோப்பையில் கேப்டனாக நியமிப்பது அணியில் இருக்கும் மற்ற வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தலாம் என்பதால் பிசிசிஐ தன் திட்டத்தில் அதிரடி மாற்றம் செய்ய உள்ளது.
அதன் படி ரோஹித் சர்மாவை மீண்டும் டி20 கேப்டனாக நியமிக்க உள்ளது பிசிசிஐ. அப்படி செய்தால் மற்ற வீரர்கள் ரோஹித் சர்மா தலைமையை எந்த கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்வார்கள். அணியில் சுமூகமான சூழல் நிலவும் என கருதுகிறது பிசிசிஐ. அதனால், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் கனவு கலைந்துள்ளது.