மும்பை : தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணிக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது குறித்து இந்திய அணியை எச்சரிக்கை செய்துள்ளார் முன்னாள் வீரர் இர்பான் பதான்.
கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஓய்வு எடுப்பதால் இப்படி மூன்று கேப்டன்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டாலும் இந்தியா எதிர்காலத்தில் மூன்று கேப்டன்கள் கொண்டு செயல்படவே இப்போது இதை செய்வதாக கருதும் பதான் இது இந்திய அணிக்கு ஒத்துவராத விஷயம் என கூறி இருக்கிறார்.

இது பற்றி பேசுகையில், "தனித்தனி கேப்டன் நியமனம் எதிர்காலத்திற்கான அடையாளமாக இருக்கலாம், நான் இதற்கு பெரிய ரசிகன் அல்ல. ஸ்பிலிட் கேப்டன்சி செய்யலாமா என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. உண்மையில் வீரர்களுக்கு பணிச்சுமையால் ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் நீங்கள் அதிக வீரர்கள் கொண்ட மூன்று அணிகளை பார்க்கிறீர்கள். வெவ்வேறு கேப்டன்களையும் பார்க்கிறீர்கள்." என்று கூறினார் இர்பான் பதான்.
மேலும், "ரோஹித் சர்மா வெள்ளைப் பந்து (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டியிருந்தது என்பது தெளிவாகிறது. எனவே அவர் அந்த அணிகளில் இடம் பெறவில்லை. அவரை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக மட்டுமே பார்க்கிறீர்கள். இருப்பினும், இந்த விஷயங்கள் முன்னோக்கி செல்வதை நீங்கள் காணலாம். வெவ்வேறு வடிவங்களுக்கான வெவ்வேறு பயிற்சியாளர்களைக் கூட விரைவில் நீங்கள் பார்க்கலாம். அது நம் இந்திய அணி கலாச்சாரத்தில் நடக்காமல் இருந்தால் நல்லது என்று நான் நம்புகிறேன்" என தன் எதிர்ப்பை பதிவு செய்தார் பதான்.
மேலும், "ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் அணியைப் பார்த்தால், இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மட்டுமே மாறி உள்ளனர், டெஸ்ட் அணியில் சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே போன்ற வீரர்களைக் கருத்தில் கொள்ளலாம். இருப்பினும், அதைத் தவிர அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் பொதுவான வீரர்களே உள்ளனர்." என்று பதான் கூறினார்.
மேலும், "இளம் வீரர்களை பற்றி பேசினால், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் எல்லா அணிகளிலும் விளையாடுவதை பார்க்கலாம். எனவே பெரும்பாலான வீரர்கள் எல்லா வடிவங்களிலும் விளையாடுபவர்கள். அதனால்தான், 70 முதல் 80 சதவீத வீரர்கள் எல்லா வடிவங்களிலும் விளையாடினால், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மூன்று அணிக்கும் ஒரே நபராக இருந்தால் நல்லது." என்றார் பதான்.