மும்பை : இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில், பாதியில் தாமாக விலகினார். அது குறித்து சில நாட்கள் முன்பு பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அதன் அதிர வைக்கும் பின்னணி தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த ஓராண்டாக தொடர்ந்து இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்று வந்த போதும் இரண்டாம் நிலை மாற்று வீரராக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தார் இஷான் கிஷன்.

2021ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார் இஷான் கிஷன். அதன் பின் சில போட்டிகளில் மட்டும் வாய்ப்பு பெற்ற அவர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்து 210 ரன்கள் குவித்து இருந்தார். அப்போது இஷான் கிஷன் இனி இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறி விடுவார் என கூறப்பட்டது.
அதே போல, அதன் பின் நடந்த ஒவ்வொரு ஒருநாள் தொடரிலும், டி20 தொடரிலும் இஷான் கிஷன் இந்திய அணியில் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார். ஆனால், அவர் போட்டிகளில் களமிறங்குவதில் தான் சிக்கல் ஏற்பட்டது. இஷான் கிஷன் எந்த இடத்தில் பேட்டிங் இறங்கினாலும் ரன் குவிக்கிறார் என்பதை கண்டு கொண்ட இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவரை அணியின் நிரந்தர மாற்று பேட்ஸ்மேனாகவே மாற்றினர்.
எந்த பேட்ஸ்மேனாவது காயத்தில் சிக்கினால், அல்லது ஓய்வில் இருந்தால் காலியாகும் பேட்டிங் வரிசையில் இஷான் கிஷனை ஆட வைத்து வந்தனர். ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்த போது மிடில் ஆர்டரில் ஆடினார். 2023 உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில் காய்ச்சல் ஏற்பட்டு ஓய்வில் இருந்த போது துவக்க வீரராக ஆடினார். ஆனால், எல்லாமே ஒன்று, இரண்டு போட்டிகள் மட்டுமே. ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் அணிக்கு திரும்பிய உடன் இஷான் கிஷன் தண்ணீர் கொடுக்கும் வாட்டர் பாய் வேலைக்கு மாறி விடுவார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இடம் பெற்று இரண்டு அரைசதம் அடித்தார். ஆனால், அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் வந்த உடன் இஷான் கிஷன் நீக்கப்பட்டார். அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் புதிய விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இஷான் கிஷன் புறக்கணிக்கப்பட்டார்.
இப்படி போட்டிகளில் ஆடும் வாய்ப்பு இல்லை என்றாலும் உத்தேச அணியில் மட்டும் இஷான் கிஷனுக்கு எப்போதும் இடம் அளிக்கப்பட்டு வந்தது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வெளியே அமர வைக்கப்பட்ட இஷான் கிஷனுக்கு, அடுத்து டெஸ்ட் தொடருக்கு முன் நடக்க இருந்த பயிற்சி போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. டெஸ்ட் அணியிலும் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருந்தார்.
அங்கேயும் தனக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலையில் மனச் சோர்வுக்கு ஆளாகி இருக்கிறார் இஷான் கிஷன். போட்டிகளில் ஆடாத போதும் கடந்த டிசம்பர் 2022 முதல் இப்போது தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் வரை இந்திய அணியுடன் பயணம் மேற்கொண்டு வந்த களைப்பும் சேர்ந்து அவரை மேலும் சோர்வடைய வைத்து இருக்கிறது.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தன்னை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்குமாறு கூறி இருக்கிறார். அவரது மன நிலையை புரிந்து கொண்ட இந்திய அணி நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது. இது பற்றிய தகவல் இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.