மும்பை : இந்திய அணியில் நன்றாக ஆடியும் சரியான வாய்ப்பு அளிக்கப்படாமல் இருந்து வரும் இஷான் கிஷனுக்கு பெரிய வாய்ப்பை பிசிசிஐ அளிக்க உள்ளதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு வாய்ப்பு அளிக்கப்படாது எனவும், அவரது மூன்றாம் வரிசையில் இஷான் கிஷனை பேட்டிங் செய்ய வைக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஸ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவார் என ஒரு தகவல் வெளியான நிலையில் தற்போது பிசிசிஐ வேறு திட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தென்னாப்பிரிக்கா தொடருக்கான அணித் தேர்வுக்கு முன்னதாக பிசிசிஐ உயர் அதிகாரிகள், தேர்வுக் குழு, கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் பேசினர். அப்போது டி20 உலகக்கோப்பை குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதில் தான் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் அவரை அணியில் தேர்வு செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அப்படி விராட் கோலியை டி20 அணியில் இருந்து நீக்கினால் அவரது இடத்தில் பேட்டிங் செய்ய சிறந்த வீரர் ஒருவரை ஆட வைக்க வேண்டும் என்ற நிலையில், இஷான் கிஷனை ஆட வைக்கலாம் என தேர்வுக் குழு கூறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், இஷான் கிஷன் இதுவரை அணியில் நிரந்தர இடத்தை பெறாத போதும் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்துள்ளதோ அப்போதெல்லாம் அணிக்கு தேவையான ரன்களை அவர் அடித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் துவக்க வீரர், மூன்றாம் வரிசை, மிடில் ஆர்டர் என இஷான் கிஷன் பேட்டிங் இறங்காத இடம் இல்லை. எல்லா இடத்திலும் போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப ஆடி இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் கூட மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்கிய அவர் ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் அடித்து இருக்கிறார். எனவே, அவருக்கு உரிய இடம் அணியில் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.