மும்பை : சமீபத்தில் தான் இந்திய வீரர் இஷான் கிஷன் தனது பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்தார். இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிசிசிஐ விதி ஒன்றை மீறி இருக்கிறார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து இஷான் கிஷன் தாமாக விலகினார். அதன் பின் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்குமாறு கூறியும் அதை செய்யாத அவர், ஐபிஎல் தொடருக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள முடிவு செய்தார்.

இதை அடுத்து ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து பயிற்சி செய்த இஷான் கிஷன், ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிஒய் பாட்டில் டி20 தொடரில் பங்கேற்றார். இது மும்பை நகருக்குள் நடைபெறும் உள்ளூர் தொடராகும். அதில் பங்கேற்ற இஷான் கிஷன் தனது இந்திய அணி உபகரணங்களை பயன்படுத்தினார்.
அப்படி பயன்படுத்தும் போது அவர் அணிந்து இருந்த ஹெல்மட்டில் பிசிசிஐ சின்னம் இடம் பெற்று இருந்தது. இது போல இந்திய அணி உபகரணங்களை வேறு தொடர்களில் பயன்படுத்தும் போது அதை மறைத்து விட்டு பயன்படுத்தலாம். ஆனால், அந்த சின்னம் வெளியே தெரியும்படி அணியக் கூடாது. அப்படி செய்தால் அந்த வீரர் பிசிசிஐ விதியை மீறியதாக கருதப்படும்.
இந்திய அணி நிர்வாகம் பேச்சை கேட்காமல், உள்ளூர் டெஸ்ட் போட்டிகளை புறக்கணித்த இஷான் கிஷன், அதற்கு தண்டனையாக பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்தார். தற்போது பிசிசிஐ-யின் அடிப்படை விதிகளில் ஒன்றான அதன் சின்னத்தை பயன்படுத்துவதிலும் தவறு செய்து இருக்கிறார். இதற்கு பிசிசிஐ என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த இஷான் கிஷன், இனி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றால் 2024 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும். இல்லையெனில் அவர் அடுத்த ஓராண்டுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய பின்னரே இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.