செஞ்சுரியன் : இந்திய அணியால் 2023 உலகக்கோப்பை மட்டுமல்ல, எந்த கோப்பையையும், எந்த முக்கிய தொடரையும் வெல்ல முடியாது. இந்தியா மிகவும் பின்தங்கிய அணி என விமர்சனம் செய்து இருக்கிறார் மைக்கேல் வாகன்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி பற்றி கடுமையாக பேசி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கத்துக்குட்டி அணி போல ஆடி இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.
முன்னதாக 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தது. 2023ஆம் ஆண்டு இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. அடுத்து 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. தற்போது முக்கியமான தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்து தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்திய அணியிடம் எல்லா திறமைகளும் இருந்தும் எந்த முக்கிய தொடரையும் வெல்லாமல் இருப்பது குறித்து மைக்கேல் வாகன் இந்திய அணியை நோக்கி கேள்வி எழுப்பி பேசினார். "உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது. இந்தியா கிரிக்கெட் உலகில் மிகவும் பின்தங்கிய அணியா?" என்று கேட்டார்.
மேலும், "அவர்களிடம் எல்லா திறமையையும் வைத்துக் கொண்டு எதையும் வெல்ல மறுக்கிறார்கள். அவர்கள் கடைசியாக ஒரு தொடரை வென்றது எப்போது? அத்தனை திறமை, விதவிதமான செயல்திறன் எல்லாம் வைத்துக் கொண்டு கடைசியாக ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை வென்றார்கள். ஆனால், கடைசி சில உலகக்கோப்பைகளில் எதையும் வெல்லவில்லை. டி20 உலகக்கோப்பைகளில் எதையும் வெல்லவில்லை." என்றார் மைக்கேல் வாகன்.
மேலும் அவர் பேசுகையில், "தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் கொண்டவர்கள் என்பது தெரிந்தும் அங்கே இத்தனை திறமைகளை வைத்துக் கொண்டு இப்படி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் எதையும் வெல்ல மாட்டார்கள் என்றே கருதுகிறேன்" என கடுமையாக விமர்சித்தார்.