மும்பை : இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் மூத்த வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி அது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
கவுதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு என்ன நடக்கும் என அவர் உடைத்து பேசினார். "கவுதம் கம்பீரின் பெயர் கடந்த சில நாட்களாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆவார் என கூறப்படுகிறது. அவர் கிரிக்கெட் விளையாட்டில் ஒரு ஜாம்பவான். ரசிகர்கள் அவர் மீது அன்பைப் பொழிந்து வருகிறார்கள்" என்றார்.

மேலும், "அவரது தலைமை பண்பை பொறுத்தவரை அவர் இந்திய அணியை வழிநடத்தி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்து சென்று இருக்கிறார். அவரது கேப்டன்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறை கோப்பை வென்று உள்ளது. அவரது ஆலோசனையின் கீழ் 2024 இல் அந்த அணி மீண்டும் கோப்பை வென்று உள்ளது." என்றார் முகமது ஷமி.
அடுத்து இளம் வீரர்களை கவுதம் கம்பீர் எவ்வாறு வழிநடத்துவார் என்பது குறித்து முகமது ஷமி பேசினார். "அவரது பயிற்சி அளிக்கும் விதம் மிகவும் நேரடியாகவும், ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அது இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும். அவர் திறன்கள், போட்டி மனோபாவம் மற்றும் எவ்வாறு அழுத்தத்தை சமாளிப்பது என்பன போன்ற விஷயங்களை இளம் வீரர்களுக்கு கற்றுத் தருவார். அவர் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருப்பார்" என்றார் முகமது ஷமி.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை பிசிசிஐ நடத்த உள்ளது. அது ஒரு கண் துடைப்பு மட்டுமே. கவுதம் கம்பீர் தான் அதன் முடிவில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர்தான் ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் கேப்டனாகப் போவது யார்? என்ற முடிவை எடுக்க வேண்டும். கவுதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.