மும்பை : இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ விரைவில் அவரிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது என்ன அதற்கு அவசியம் வந்து விட்டது? ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக அணியை வழிநடத்தி வருகிறாரே.. என்ற கேள்வி நம்மில் சிலருக்கு எழலாம். ஆனால், பிசிசிஐ பெரிய திட்டம் ஒன்றை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவுக்கு தற்போது 36 வயது ஆகிறது. அவரால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் ஆட முடியும். 38 வயதுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட் ஆடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.

அடுத்து இந்திய அணிக்கு இருக்கும் முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்.
இதில் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கப் போவது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. கடந்த சில டி20 தொடர்களில் இளம் வீரர்களுக்கே இந்திய டி20 அணியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்கு முன்பே, தன்னை டி20 அணியில் தேர்வு செய்யாமல் போனாலும் அதில் தனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை என ரோஹித் சர்மா தேர்வுக் குழுவினரிடம் கூறி இருப்பதாக ஒரு தகவலை பிசிசிஐ கசிய விட்டுள்ளது.
அதனால், டி20 அணியில் இனி ரோஹித் சர்மாவை பார்ப்பது கடினமே. அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அப்போது தான் 2027 உலகக்கோப்பை தொடருக்கு முன் நல்ல அனுபவம் மிக்க கேப்டன் இந்திய அணிக்கு கிடைப்பார். அதற்கு அவசரம் இல்லை என்றாலும் இந்த ஆண்டுக்குள் ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் நியமிக்கப்படலாம். இது குறித்து பேசவே ரோஹித் சர்மாவை பிசிசிஐ அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டெஸ்ட் அணியில் மட்டுமே ரோஹித் சர்மா இப்போதைக்கு தன் கவனத்தை செலுத்துவார் எனவும், 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு அணியை தயார் செய்யும் அதே நேரத்தில் டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனையும் இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா தயார் செய்யக் கூடும். இந்த சூழ்நிலைகளால் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி விரைவில் முடிவுக்கு வரும். டி20 எதிர்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் அவரது ஒருநாள் போட்டி எதிர்காலம் குறித்தும் விரைவில் பிசிசிஐ முடிவு செய்ய உள்ளது.