மும்பை : 2023 ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்ற வீரர்களில் அதிக சம்பளம் வாங்கிய வீரர்கள் யார் என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
அதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மூன்றாவது இடத்தில் தான் உள்ளனர். அதிக சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருப்பவர் குல்தீப் யாதவ்.
பிசிசிஐ போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் சரி சமமான சம்பளம் தான் வழங்குகிறது. சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட கூடுதல் சம்பளம் பெற்றுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது. இதில் ஒரு வீரர் கூட இந்திய அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 30 போட்டிகளில் ஆடி இருக்கிறார். தற்போது பிசிசிஐ ஒருநாள் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கு சம்பளமாக 6 லட்சம் நிர்ணயித்துள்ளது. அதன்படி குல்தீப் யாதவ் 1.80 கோடி ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் மூலம் சம்பளம் பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் மூலம் 1.74 கோடி சம்பாதித்து இருக்கிறார். சுப்மன் கில் தான் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மூன்றாவது இடத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் உள்ளனர். அவர்கள் மூவரும் 27 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ளனர். அதன் மூலம் 1.62 கோடி சம்பாதித்து உள்ளனர்.
2023 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக சம்பளம் பெற்ற இந்திய வீரர்கள் பட்டியல் -
1. குல்தீப் யாதவ் - 1.80 கோடி
2. சுப்மன் கில் - 1.74 கோடி
3. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் - 1.62 கோடி
4. ரவீந்திர ஜடேஜா - 1.56 கோடி
5. முகமது சிராஜ் - 1.50 கோடி
6. சூர்யகுமார் யாதவ் - 1.26 கோடி
7. ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா - 1.20 கோடி
8. முகமது ஷமி - 1.14 கோடி
9. ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் - 1.02 கோடி
10. ஷர்துல் தாக்கூர் - 96 லட்சம்