மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரிஷப் பண்ட் காயத்தால் விலகிய பின் கடந்த ஓராண்டாக சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் திண்டாடி வருகிறது பிசிசிஐ. வேறு வழியின்றி பகுதி நேர விக்கெட் கீப்பராக டி20 போட்டிகளில் மட்டுமே செயல்படக் கூடிய கே எல் ராகுலை டெஸ்ட் அணிக்கும் விக்கெட் கீப்பராக மாற்றியது பிசிசிஐ.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே என்பதால் அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், சிக்கல் என்னவென்றால் கே எல் ராகுல் ஒரு தரமான பேட்ஸ்மேன். அவரை விக்கெட் கீப்பிங் பணியை செய்ய வைத்தால் அவருக்கு அதனால் காயங்கள் ஏற்படலாம் அல்லது டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதில் சிரமம் ஏற்படலாம்.

அதை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கே எல் ராகுலை இனி விக்கெட் கீப்பராக பயன்படுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அடுத்து நடக்க உள்ள இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஐந்து போட்டிகள் கொண்டது என்பதால் அத்தனை போட்டிகளிலும் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை செய்வது அவருக்கு காயத்தை ஏற்படுத்தலாம் என்பதை கணக்கில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.
அதை பிசிசிஐ-யிடம் தெரிவித்ததோடு மாற்று விக்கெட் கீப்பர்களையும் தேர்வு செய்ய வைத்திருக்கிறார். தேர்வுக் குழுவும் அவர் முடிவை ஏற்று அதை செய்துள்ளது. அதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரேல் மற்றும் கே எஸ் பாரத் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் கே எஸ் பாரத் அனுபவ அடிப்படையில் டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து இருந்தார்.