மும்பை : இரண்டு வீரர்களை இந்திய அணியில் இருந்து சமீப காலமாக ஒதுக்கி வைத்துள்ளது பிசிசிஐ.
அவர்கள் நன்றாக ஆடினாலும் இந்திய அணியில் இடம் அளிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு முறை இந்திய அணி அறிவிக்கப்படும் போதும் அந்த இரண்டு வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டி ரசிகர்கள் பொங்கி எழுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
அந்த இரண்டு வீரர்கள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் சுழற் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். சஞ்சு சாம்சன் சிறந்த ஒருநாள் போட்டி சராசரி வைத்திருந்தும், உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடியும் அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதில்லை. சாஹல் ஏற்கனவே இந்திய அணியில் தன்னை நிரூபித்த அனுபவ வீரர். அது மட்டுமின்றி சமீபத்தில் 2023 ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதும் அவருக்கு இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் மறுக்கப்பட்டு வருகிறது. பிசிசிஐ அவர்கள் மீது முத்திரை குத்தி ஒதுக்கி வைத்ததே அவர்களுக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சனை பொறுத்தவரை அவருடைய அணுகுமுறை குறித்து ஒரு நம்பகம் இல்லாத புகார் சொல்லப்படுகிறது. அதாவது அவர் மூத்த வீரர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன் ஆகியோர் சொல்லும் ஆலோசனைகளை கேட்க மாட்டார். தனக்கு சரி என மனதில் படுவதையே செய்வார். அப்படி இருப்பதால் அணியின் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் வருவதாக காரணம் காட்டி அவரை அணியில் சேர்க்க மறுக்கிறார்கள் என்பதே அந்த புகார்.
இந்த புகாரை முழுவதுமாக நம்ப முடியாது. அதற்கு காரணம், இந்த புகாரை முதலில் வெளிப்படையாக கூறியது முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த். அவரும், சஞ்சு சாம்சனும் கேரளாவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஏற்கனவே சில மனக் கசப்புகள் உள்ளன. அதன் காரணமாகக் கூட ஸ்ரீசாந்த் இப்படி ஒரு புகாரை அவர் மீது கூறி இருக்கலாம். சஞ்சு சாம்சன் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு நல்ல பெயரை எடுத்தவர் என்பதால் அவர் மீதான இந்தப் புகாரை முழுமையாக நம்புவது கடினமாக உள்ளது. ஆனால், இது போன்ற ஏதோ ஒரு உள்நோக்கம் கொண்டு தான் பிசிசிஐ சஞ்சு சாம்சனை தவிர்க்கிறது என்பது மட்டும் புரிகிறது.
மறுபுறம் சாஹல் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து ஒரு முறை பேசிய ஹர்பஜன் சிங், அணியில் சில வீரர்கள் குறித்து சாஹல் தவறான கருத்துக்களை பேசி இருக்கலாம் அல்லது முக்கிய வீரர் யாருக்காவது பிடிக்காத விஷயங்களை அவர் செய்து இருக்கலாம். நன்றாக ஆடும் வீரரை அணியில் தேர்வு செய்யாமல் இருக்க இதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் என கூறி இருந்தார்.
சஞ்சு சாம்சன், சாஹல் இந்திய அணியில் இடம் பெறாமல் இருப்பதன் பின்னணியில் இது போன்ற வெளிப்புற காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதை எல்லாம் மறந்து அவர்களுக்கு ஒரு முறையாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதுவும் சரியான முறையில் அணியில் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை பிசிசிஐ செய்யுமா?