மும்பை : பிசிசிஐயின் 21 வது உயர் மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கான இடம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றது.
மேலும் இந்த உலகக் கோப்பை தொடரை ஒட்டுமொத்தமாக 12 லட்சம் மக்கள் மைதானத்திற்கு வந்து கண்டுக்களித்திருக்கிறார்கள். இந்த நிலையில் உலககோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருந்தது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தற்காலிக ஓய்வு பெற உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருப்பதால் அதில் கவனம் செலுத்த இருவரும் முடிவு எடுத்து இருக்கிறார்கள். இதனால் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்ல போகிறோம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம்.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. அதாவது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெறும் ஒவ்வொரு உள்ளூர் போட்டிகளையும் நேரலையில் ரசிகர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உலகின் நம்பர் ஒன் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகள் ரசிகர்களுக்கு நேரலை செய்யப்படுவதில்லை.
இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு உள்ளூர் போட்டியையும் நேரலை செய்ய இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கான உபகரணங்களை யார் கொடுத்து ஒளிபரப்பு செய்ய முன் வரப் போகிறார்கள் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்காலம் குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். முன்னதாக கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி மும்பையில் பிசிசிஐயின் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. தற்போது ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.