மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி ஆகியோர் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறார்கள். இந்த நிலையில், இந்திய அணி இளம் வீரர்களை வளர்த்து எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்காக பல இளம் வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு அடையாளம் கண்டு 2023ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் வாய்ப்பு அளித்தது. அப்படி வாய்ப்பு பெற்ற பல வீரர்களில் மூன்று வீரர்கள் இந்திய அணியின் எதிர்காலம் என முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்களால் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறார்கள்.

ரிங்கு சிங் -
அவர்களில் முதல் வீரர் ரிங்கு சிங். அதிரடி பேட்ஸ்மேன் ஆன இவர் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் ஃபினிஷராக களமிறங்க சரியான வீரராக கருதப்படுகிறார். இதுவரை டி20 அணியில் அணிக்கு என்ன தேவையோ அதை செய்து நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
2007 டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல முக்கிய காரணம் அப்போது ஃபினிஷராக இறங்கி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக அதிரடி ஆட்டம் ஆடிய யுவராஜ் சிங் தான். கிட்டத்தட்ட அதே போன்ற பாணியை வைத்துள்ள ரிங்கு சிங் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என கருதப்படுகிறது.
முகேஷ் குமார் -
25 வயதாகும் முகேஷ் குமார் சிறந்த வேகப் பந்துவீச்சாளராக வளர்ந்து வருகிறார். இந்திய டி20 அணி மட்டுமின்றி, தற்போது ஒருநாள் அணி, டெஸ்ட் அணியிலும் இடம் பெற்று இருக்கிறார். இந்திய அணி வாய்ப்பு முகேஷ் குமாரை தேடிச் செல்லக் காரணம், அவரது ஸ்விங் பவுலிங் தான்.
முகேஷ் குமாரின் பவுலிங், அப்படியே இந்திய அணியின் அனுபவ வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியை போலவே இருப்பதோடு, விக்கெட் வீழ்த்துவதிலும் சிறப்பாக செயல்படுவதால் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர பவுலராக கருதப்படுகிறார்.
யாஷஸ்வி ஜெய்ஸ்வால் -
துவக்க வீரராக டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தன் அதிரடி பேட்டிங் காரணமாக ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியில் நிரந்தர துவக்க வீரராக வலம் வருவார் என முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர்.
ஆனால், இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கும் துவக்க வீரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், அவர்கள் எல்லோரையும் விட தன் அதிரடி பேட்டிங்கால் தனித்து தெரிகிறார் ஜெய்ஸ்வால். இவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.