டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராக பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த ஷிகர் தவான், தற்போது இந்திய அணியில் வாய்ப்பின்றி இருக்கிறார்.
அவரது தனிப்பட்ட குடும்ப வாழ்விலும் பல்வேறு சோகங்களை சந்தித்த ஷிகர் சவான் தற்போது தனிமையில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு மலைப் பிரதேசத்தில் மலைவாசிகளுடன் நேரம் செலவிட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தார். அது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

ஷிகர் தவானிற்கு சில மாதங்கள் முன்பு விவாகரத்து ஆகி இருந்தது. அவரது மனைவி ஆஸ்திரேலியாவில் இருக்கும் நிலையில், அவரது ஒரே மகனும் தாயுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். தன் மகனை சந்திக்க அனுமதி இல்லாததால் ஷிகர் தவான் தவித்து வருகிறார். வீடியோ காலில் கூட தன் மகனை பார்க்க முடியவில்லை என தன் துக்கத்தை அவ்வப்போது பகிர்ந்து இருந்தார். இது தொடர்பான வழக்கு ஒன்று ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. சட்ட ரீதியாக தன் மகனை இந்தியாவிற்கு அழைத்து வந்து தன்னுடனே வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார் ஷிகர் தவான்.
இந்த நிலையில், இந்தியாவில் தனது சோகத்தை மறக்க அவ்வப்போது பயணம் செய்து வருகிறார். அவர் பெரும்பாலும் ஹோட்டல்களில் தான் தங்கி இருக்கிறார். சமீபத்தில் இமாச்சல பிரதேசத்துக்கு சென்ற ஷிகர் தவான், அங்கு மலை மேல் தங்கி இருக்கும் மலைவாசிகளுடன் நேரத்தை செலவிட்டார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது குடும்ப வாழ்வில் நடந்த சோகங்களை குறிப்பிட்டு அவர் அதிலிருந்து மீண்டு வர வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் சிலர் ஐசிசி தொடர்களில் அதிக ரன்கள் குறித்த வீரராக இருக்கும் ஷிகர் தவானை 2024 டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தான் இந்திய அணியில் இடம் பெறும் நிலையில் இருந்து நீண்ட தூரம் கடந்து வந்து விட்டதாக ஷிகர் தவான் ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.