சென்னை : இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ஆகலாம் என கனவு கண்டு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மூலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை ஸ்ரேயாஸ் ஐயர் இனி இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது கூட கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் 2024 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் வருங்கால இந்திய கேப்டன் என பாராட்டப்பட்டு வருகிறார்.

இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்ற உடன், "ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாக தகுதியானவர்" என முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குறிப்பிட்டார். ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஸ்ரேயாஸ் ஐயரை வருங்கால இந்திய அணியின் கேப்டன் என குறிப்பிட்டு வருகின்றனர்.
முன்பு 2022 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார் ஹர்திக் பாண்டியா. அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்ததற்கு பின்பு தான் அவரை இந்திய அணி துணை கேப்டனாக நியமித்தனர். அவரை தற்போது வருங்கால இந்திய அணியின் கேப்டன் எனவும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற வகையில் ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டியாக மாறி இருக்கிறார். தற்போது ஹர்திக் பாண்டியா ஃபார்ம் இழந்து தவித்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நடக்கும் புகைச்சல் ஒருபுறம், தனது குடும்பத்தில் நடக்கும் சிக்கல்கள் ஒருபுறம் என சோர்ந்து போய் இருக்கிறார்.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டன் பதவியை நோக்கி ஒரு அடி முன்னே எடுத்து வைத்துள்ளார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் வழங்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இனி இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்து, அவர் வருங்கால இந்திய அணியின் கேப்டனா? இல்லையா? என்பது தெரியவரும்.