மும்பை: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அவருக்கு ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படாது என கூறப்பட்ட நிலையில், அவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க காய் நகர்த்தி வருகிறார். இதன் பின்னணியில் கவுதம் கம்பீர் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக புச்சி பாபு உள்ளூர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் பதவியேற்ற பின் முதல் வேலையாக சூர்யகுமார் யாதவை இந்திய டி20 அணியின் கேப்டனாக ஆக்கினார். முன்னதாக ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டன் எனக் கூறப்பட்ட நிலையில் கம்பீர், சூர்யகுமார் யாதவுக்கு முக்கியத்துவம் அளித்தார்.

கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இணைந்த பின் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3 - 0 என வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் அணியில் இடம் பெற முயற்சிகளை துவக்கி இருக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். அவரை டி20 வீரர் என முத்திரை குத்தி டெஸ்ட் அணியில் இருந்து புறக்கணித்து விட்டது தேர்வுக் குழு. இந்த நிலையில் அவர் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அறிவுறுத்தலின் பெயரில் தான் சூர்யகுமார் யாதவ் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறாரா? அல்லது தனது சொந்த முயற்சியில் டெஸ்ட் அணியில் இடம் பெற முயல்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என விரும்புவதாகவும், புச்சி பாபு தொடரில் விளையாடுவதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனக்கு நல்ல பயிற்சி கிடைக்கும் எனவும் கூறி இருக்கிறார். இது குறித்து மும்பை அணி வட்டாரத்தில் விசாரித்த போது சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு சர்வதேச வீரர் மும்பை அணியில் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என கூறினார்கள்.