சென்னை : வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக தன்னை நிரூபிக்காத ரோஹித் சர்மா ஏன் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்? என அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத்.
மேலும், டெஸ்ட் அணி கேப்டனாக சிறந்த ரெக்கார்டு வைத்திருக்கும் விராட் கோலி ஏன் அணியின் கேப்டனாக இல்லாமல் இருக்கிறார்? எனவும் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். சுற்றி வளைத்து ஒழுங்காக ஆடாத ரோஹித் சர்மா ஏன் கேப்டனாக இருக்கிறார்? அவரை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என பத்ரிநாத் கூறி இருக்கும் கருத்து சமூக ஊடகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று நாட்களுக்குள் இந்திய அணி இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ஆல் - அவுட் ஆகி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த முன்னாள் வீரர் பத்ரிநாத் ஒரு வீடியோவில் இந்திய அணியின் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் ஒரு தலைவராக இருக்கிறார். அவர் கேப்டனாக பேட்டிங் சராசரி 52 வைத்து இருக்கிறார். கேப்டனாக 5000 ரன்கள் குவித்து இருக்கிறார் என்றார்.
68 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 40 வெற்றிகள் மற்றும் 17 தோல்விகள் பெற்றுக் கொடுத்து இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதிக டெஸ்ட் வெற்றி பெற்ற கேப்டன்கள் வரிசையில் கிரீம் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்து இடம் பெற்றுள்ளார் என்றார்.
மேலும், அவர் ஏன் இப்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக இல்லை? என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன். அவர் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன். ரோஹித் சர்மா - விராட் கோலியை நான் ஒப்பிடவில்லை. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் பெரிய வீரர். அவர் எல்லா நாடுகளிலும் ரன் குவித்து இருக்கிறார். அவர் அணியை வழிநடத்தாமல், பலவீனமான வீரர் ஏன் அணியை வழிநடத்துகிறார்? என ரோஹித் சர்மாவை பலவீனமான வீரர் என நேரடியாக விமர்சனம் செய்தார் பத்ரிநாத்.
மேலும், ரோஹித் சர்மா என்னைப் பொறுத்தவரை ஒரு பலவீனமான வீரர். துவக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை. அவர் அணியில் போவதும், வருவதுமாக இருக்கிறார். அது எல்லாவற்றையும் நாம் பார்க்க வேண்டும். ரோஹித் சர்மா வெளிநாடுகளில் இன்னும் தன்னை துவக்க வீரராக நிரூபிக்கவில்லை. அவர் ஏன் இப்போது தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்? என ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்தது குறித்தே கேள்வி எழுப்பினார் பத்ரிநாத்.